Published : 27 Jan 2022 12:56 PM
Last Updated : 27 Jan 2022 12:56 PM

‘‘மத்திய அரசின் அழுத்தத்தால் எனது குரலை அடக்க முயற்சி; பின்தொடர்பவர்களை கட்டுப்படுத்துவதா?’’- ட்விட்டர் நிர்வாகத்துக்கு ராகுல் காந்தி கடிதம்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக தன்னை பின் தொடர்பவர்களை ட்விட்டர் நிர்வாகம் கட்டுப்படுத்தி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலுக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதம் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலுக்கு டிசம்பர் 27 தேதியிடப்பட்டு எழுதியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:

எனது ட்விட்டர் கணக்கைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை, தினமும் சராசரியாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை உயர்ந்து வந்தது. ஆனால் தற்போதுதினசரி கணக்கை எடுத்தால் பூஜ்யம் என்ற நிலையை நோக்கி நகர்கிறது.

டெல்லியில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்த நாளில் இருந்து இந்த பிரச்சனை தொடங்கியது. வேளாண் சட்டம் குறித்து நான் பதிவிட்ட வீடியோ ஒன்று அதிக பார்வைகளை பெற்றிருந்தபோதும் நீக்கப்பட்டது.

ராகுல் காந்தி ட்விட்டர் கணக்கு- பிரதிநிதித்துவப் படம்

அரசின் ட்விட்டர் கணக்குகள் உட்பட இன்னும் சில கணக்குகள், நான் பதிவிட்ட அதே நபர்களின், அதேமாதிரியான புகைப்படங்களைப் பதிவிடுகின்றன. அந்தக் கணக்குகள் எதுவும் முடக்கப்படவில்லை. என் கணக்கு கூட சில நாட்கள் முடக்கப்பட்டிருந்தது. எனது கணக்கு மட்டும் தனியாக குறிவைக்கப்பட்டது.

ட்விட்டரில் என்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு 2 லட்சம் என இருந்தது. இந்த சம்பவங்களுக்கு பிறகு கடந்த 2021 ஆகஸ்ட் முதல் வெறும் 2,500 என்ற எண்ணிக்கையில் மாறி இருக்கிறது. என்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.9 கோடியாக அப்படியே மாறாமல் நிற்கிறது. இதை தற்செயல் என கருத முடியாது.

மத்திய அரசு கொடுக்கும் அழுத்தம் தான் இதற்கு காரணம் என ட்விட்டர் இந்தியாவில் வேலை செய்யும் என் நண்பர்கள் கூறுகின்றனர்.

எனது குரலை அடக்க மத்திய அரசு பெரும் அழுத்தம் தருவதாக, ட்விட்டர் இந்தியாவில் உள்ளவர்கள் நம்பத்தகுந்த வகையிலும் எச்சரிக்கையான முறையிலும் என்னிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பன்முகை தன்மையை அழிக்கும் செயலில் ட்விட்டர் இடம் பெற அனுமதிக்கப்படக்கூடாது எனக் கோடிக்கணக்கான இந்தியர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இதற்காக தான் நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். இது குறித்து நீங்கள் பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

இந்தநிலையில் இதற்கு பதிலளித்த ட்விட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளதாவது:

ட்விட்டர் தளத்தில், பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை விவரங்களை அனைவரும் கண்கூடாக பார்க்கும் அம்சம் உள்ளது. ஒருபோதும் ட்விட்டர் தளம் தன்னிச்சையாக செயல்படாது.

ஆரோக்கியமான சேவை மற்றும் நம்பகமான கணக்குகளை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியாக முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இதன் ஒரு பகுதியாக பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் ஏற்ற இறக்கம் ஏற்படலாம்.

மேனிப்புலேஷன், ஸ்பேம் விஷயங்களில் எங்கள் நிலைப்பாட்டை மீறினால் நடவடிக்கை எடுக்கிறோம். ஒவ்வொரு வாரமும் கோடிக்கணக்கான கணக்குகளை அகற்றி வருகிறோம். எனவே ஒரு கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையில் ஏற்றம், இறக்கம் இருப்பது சாதாரணமானது தான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x