Published : 25 Jan 2022 10:04 PM
Last Updated : 25 Jan 2022 10:04 PM

பெருந்தொற்று மேலாண்மையில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி: பெருந்தொற்று மேலாண்மை இந்தியாவுக்கு சிக்கலாக இருந்திருக்க வேண்டியது ஆனால் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் உரையின் முழு விவரம்:

நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள். இது நாம் அனைவருக்கும் பொதுவான, இந்தியத்தன்மையை கொண்டாடுவதற்கான தருணம். 1950ம் ஆண்டு இதே தினத்தில்தான், நம் அனைவரின் புனிதமான சாரம், ஒரு முறையான வடிவத்தை பெற்றது.

இந்நாளில்தான், இந்தியா மிகப் பெரிய ஜனநாயக குடியரசாக நிறுவப்பட்டது மற்றும் இந்திய மக்களாகிய நாம், அரசியல் சாசனத்தை, நமது ஒட்டுமொத்த தொலைநோக்காக நடைமுறைப்படுத்தினோம். நமது ஜனநாயகத்தின் பன்முகத்தன்மை மற்றும் உயிரோட்டம் உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது.

இந்த ஒற்றுமை உணர்வு, ஒரே நாடாக இருப்பதுதான் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டம் பெருந்தொற்று காரணமாக எளிமையாக இருக்கலாம். ஆனால் உணர்வு எப்போதும்போல் வலுவாக உள்ளது.

இந்நிகழ்ச்சியில், சுயராஜ்ஜியத்துக்காக தங்கள் ஈடுஇணையற்ற வீரரத்தை வெளிப்படுத்திய மற்றும் மக்களை தூண்டிய சுதந்திர போராட்ட வீரர்களை நாம் நினைவில் கொள்வோம். இரு நாட்களுக்கு முன்பு, ஜனவரி 23ம் தேதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்ததினத்தை நாம் கொண்டாடினோம். இவர்தான் ‘ஜெய்-ஹிந்த்’ என்ற உற்சாகமான வணக்கத்தை பின்பற்றியவர். சுதந்திரத்துக்கான இவரது தாகம், இந்தியாவை கவுரமான நாடாக்க இவர் மேற்கொண்ட லட்சியம் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது.

அரசியல் சாசனத்தை உருவாக்கிய அரசியல்சாசன அவையில், சிறந்த சிந்தனைவாதிகள் இடம் பெற்றிருந்தது நமது பாக்கியம். அவர்கள் நமது சுதந்திரபோராட்டத்துக்கு வழிகாட்டியவர்கள். நீண்ட ஆண்டுகளுக்கப்பின்பு, இந்தியாவின் ஆன்மா மீண்டும் விழித்தெழுந்தது. இந்த விதிவிலக்கான ஆண்களும், பெண்களும், புதிய விடியலின் முன்னோடிகளாக இருந்தனர்.

அவர்கள், மக்கள் சார்பில், ஒவ்வொரு சட்டத்தின் அம்சங்களையும் விவாதித்தனர். இந்த ஆய்வு 3 ஆண்டுகள் வரை நடந்தது. இறுதியில், டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர்தான், வரைவு குழுவின் தலைவராக, அரசியல் சாசனத்தின் இறுதி பதிப்பை தயாரித்தார்.

அரசின் செயல்பாட்டு விவரங்கள் அடங்கிய அரசியல் சாசன உரை நீளமானது. இதன் முன்னுரை வழிகாட்டி விதிமுறைகளை சுருக்கமாக கூறுகிறது - ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சுகோதரத்துவம். இவை அடித்தளத்தை அமைக்கின்றன. இதில்தான் நமது குடியரசு நிற்கிறது. இவையே நமது கூட்டுப் பரம்பரியத்தை உருவாக்கும் மதிப்புகள்.

குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படைக் கடமைகள் என்ற வடிவில் இந்த மதிப்புகள் நமது அரசியல் சாசனத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. உரிமைகளும் மற்றும் கடமைகளும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை மக்கள் கடைப்பிடிப்பது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கான சரியான சூழலை உருவாக்குகிறது. தேசிய சேவைகளுக்கு அழைப்பு விடுக்கும்போது, அதை நிறைவேற்றுவது அடிப்படை கடமை. அதனால், கோடிக்கணக்கான மக்கள், தூய்மை இந்தியா திட்டத்தையும், கோவிட் தடுப்பூசி திட்டத்தையும் மக்கள் இயக்கமாக மாற்றினர். இதுபோன்ற பிரச்சாரங்களின் வெற்றிக்கான பெருமை நமது மக்களை சார்ந்தது. நாட்டு நலன் குறித்த இந்த பிரச்சாரத்தை, தங்களின் தீவிர பங்களிப்பு மூலம் நமது மக்கள் தொடர்ந்து வலுப்படுத்துவர் என்பது உறுதி.

இந்திய அரசியல் சாசனம், 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியல் சாசன அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை நாம் தற்போது அரசியல் சாசன தினமாக கொண்டாடுகிறோம். ஆனால், இது 2 மாதம் கழித்துதான் அமல்படுத்தப்பட்டது. முழு சுதந்திரம் பெற 1930ம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட தினத்தை குறிப்பிடுவதற்காக இவ்வாறு செய்யப்பட்டது. 1930ம் ஆண்டிலிருந்து 1947ம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதிதான் ‘பூர்ண சுயராஜ்ய தினமாக’ கொண்டாடப்படுகிறது. அதனால் அந்த தினம் அரசியல் சாசனத்தை அமல்படுத்த தேர்வு செய்யப்பட்டது.

1930ம் ஆண்டில் எழுதிய மகாத்மா காந்தி, ‘பூர்ண சுயராஜ்ய தினம் எவ்வாறு கொண்டாடப்படு வேண்டும் என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார். அவர் கூறுகையில்:

‘‘அகிம்சை மற்றும் உண்மை வழிகளில் மட்டுமே நம் முடிவை அடைய விரும்புவதால், சுய சுத்திகரிப்பு மூலம் மட்டுமே அதை அடைய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகையால் ஆக்கப்பூர்வமாக பணிகளை செய்ய இந்தநாளை நாம் அர்பணிக்க வேண்டும்’’

காந்திஜியின் அறிவுரை காலத்தால் அழியாதவை என்று சொல்லத் தேவையில்லை. குடியரசு தினத்தை நாம் கொண்டாட அவர் விரும்பியிருக்கலாம். சுயபரிசோதனை மூலம் நாம் சிறந்த மனிதர்களாக மாறுவதையும், அதன்பின்பே மற்றவர்களுடன் கைகோர்த்து சிறந்த இந்தியா மற்றும் சிறந்த உலகை நாம் உருவாக்க வேண்டும் என அவர் விரும்பினார்.

இரண்டு ஆண்டு கால போராட்டம்: இப்போது உள்ளது போல், உலகத்துக்கு இவ்வளவு உதவி தேவைப்பட்டதில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக, கரோனாவுடன் மனித இனம் போராடி வருகிறது. லட்சக்கணக்கான உயிர்களை இழந்துவிட்டோம், உலக பொருளாதாரமே பாதிப்படைந்துள்ளது. இது மனித இனத்துக்கு அசாதாரண சவாலாக உள்ளது.

பெருந்தொற்று மேலாண்மை இந்தியாவில் மிகவும் சிக்கலானதாக இருந்திருக்க வேண்டியது. நம் நாட்டில் அதிக மக்கள் தொகை உள்ளது. வளரும் பொருளாதார நாடாக, கண்ணுக்கு தெரியாத எதிரியை எதிர்த்து போராடும் அளவுக்கு வளங்கள் மற்றும் கட்டமைப்புகள் நம்மிடம் இல்லை. ஆனாலும், இதுபோன்ற சிக்கலான நேரத்தில், நாட்டின் மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக இருந்தது.

கரோனாவுக்கு எதிராக ஈடுஇணையற்ற உறுதியை நாம் வெளிப்படுத்தினோம் என கூறவதில் நான் பெருமையடைகிறேன். முதல் ஆண்டிலேயே, சுகாதார கட்டமைப்பை நாம் அதிகரித்தோம், பிறருக்கும் உதவினோம். இரண்டாம் ஆண்டில் உள்நாட்டில் தடுப்பூசியை உருவாக்கி, உலகின் மிகப் பெரிய தடுப்பூசி நடவடிக்கையை தொடங்கினோம். பிறநாடுகளுக்கும் தடுப்பூசிகளையும், மருந்தகளையும் நாம் வழங்கினோம். இந்தியாவின் இந்த பங்களிப்பை சர்வதேச அமைப்புகள் பாராட்டுகின்றன.

சில பின்னடைவுகள் இருக்கலாம். துரஅதிர்ஷடமாக இந்த தொற்று மாறுபட்ட புதிய வகைகளுடன் திரும்ப வந்து விட்டது. இந்த தொற்று வேகமாக பரவுவதால், நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தேசிய கல்வி கொள்கையுடன் நமது அரசு சரியான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இது பாரம்பரிய மதிப்புகள் மற்றும் நவீன திறமைகளின் சரியான கலப்பாக உள்ளது.

கடந்தாண்டு, நமது விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் சாதனை படைத்தனர். இந்த இளம் சாம்பியன்கள் இன்று லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கின்றனர்.

இந்தியா பழங்கால நாகரிக நாடு ஆனால், இளமையான குடியரசு நாடு. நமக்கு, நாட்டை மேம்படுத்துவது தொடரச்சியான முயற்சி. குடும்ப அளவிலும், நாட்டளவிலும், அடுத்த தலைமுறையின் சிறப்பான எதிர்காலத்துத்தை உறுதி செய்வதற்காக ஒரு தலைமுறை கடினமாக உழைக்கிறது. நாம் சுதந்திரம் பெற்றபோது, காலனி ஆட்சி நம்மை ஏழ்மையில் விட்டுச் சென்றது. ஆனால் 75 ஆண்டுகளில் நாம் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளோம். நமது நாடு தொடர்ந்து முன்னேற்ற பாதையில் சென்று உலகளவில் சரியான இடத்தை பிடிக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான குடியரசு தினம்!

இவ்வாறு அவர் உரையாற்றியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x