Published : 25 Jan 2022 02:32 PM
Last Updated : 25 Jan 2022 02:32 PM

‘‘பிரச்சினை தீவிரமானது’’- இலவசங்கள் குறித்த  அரசியல் கட்சிகளின் வாக்குறுதி: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: தேர்தல் பிரச்சாரத்தின்போது இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பதை எப்படி தடை செய்வது என கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அஸ்வினி குமாா் உபாத்யாய என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தலில், அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வ‌ழங்குவோம் என ஒரு கட்சி அறிவிக்கிறது, மற்றொரு கட்சி இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை அறிவிக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில், அந்த அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் கொடுக்கவே நிதி இல்லாமல் இருக்கிறது. ஏற்கெனவே அந்த மாநிலத்துக்கு 77 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது. கடனோடு கடனாக இலவசங்களை எப்படி தர முடியும்.ஆனால் பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு இலவச வாக்குறுதிகள் அரசியல் கட்சிகளால் அளிக்கப்பட்டிருக்கின்றன.

தோ்தல் பிரச்சாரத்தில் வாக்காளா்களை கவர்வதற்காக அரசியல் கட்சிகள் இலவசங்களை தருவதாக வாக்குறுதி அளிக்கின்றன. இலவசங்கள் தருவதாக கூறுவது ஆட்சியில் அமர வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற செயலாகும், இதை அனைத்து கட்சிகளும் செய்துவருகின்றன‌.

ஜனநாயக நடைமுறைகளை பாதுகாக்க, இலவச வாக்குறுதிகள் கொடுப்பது தவிா்க்கப்பட வேண்டும். நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்து இலவசங்களை தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகள் அறிவிப்பது தவறானது. இது வாக்களிப்பவர்களின் சமநிலையை பாதிக்கிறது. தோ்தலுக்கு முன்பு, அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்.

இந்த இலவச அறிவிப்புகள் அரசியல் சாசன அறிவுறுத்தியுள்ள கோட்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். எனவே இலவச வாக்குறுதி அளிப்பதை தடுத்து நிறுத்த இதனை கட்சிகளின் அங்கீகாரம் அளிப்பதற்கான தோ்தல்ஆணைய நடைமுறையில் சேர்க்க வேண்டும். இதற்கான உத்தரவை தோ்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் ஏஎஸ் போபண்ணா, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் ‘‘இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பதை எப்படி தடை செய்வது. அதேசமயம் மனுதாரர் எழுப்பியுள்ள பிரச்சனை தீவிரமானது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் விதிமுறைகள் வகுப்பது சரியானது தான். இதுகுறித்து 4 வாரங்களுக்குள் பதிலளித்து மத்திய அரசு, தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும்’’ என கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x