அனைத்து துறைகளிலும் உ.பி. சாதனை படைக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்

அனைத்து துறைகளிலும் உ.பி. சாதனை படைக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் 73-வது நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் கூறும்போது, "பாதுகாப்பான, வளமான மாநிலமாக உத்தர பிரதேசத்தை உருவாக்க பாஜக அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த லட்சிய பயணத்தில் மாநில மக்கள் அனைவரும் இணைய வேண்டும். கடந்த 2017-ம் ஆண்டில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு புதிய பாதையில் மாநிலம் பயணத்தை தொடங்கியது. கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் மாநிலம் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் வீடியோ உரையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த வீடியோவுடன் பிரதமர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் உத்தர பிரதேசம் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்து வருகிறது. மாநில மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. உத்தர பிரதேசம் வேகமாக முன்னேறி வருகிறது. புதிய இந்தியாவை உருவாக்குவதில் அந்த மாநிலம் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in