Published : 24 Jan 2022 09:39 AM
Last Updated : 24 Jan 2022 09:39 AM

உ.பி.யில் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை கோரி சமாஜ்வாதி கடிதம்: பாஜக கிண்டல்

லக்னோ: கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு சமாஜ்வாதி கட்சி கடிதம் எழுதியுள்ள நிலையில், தோல்வி பயத்தால் அக்கட்சி இவ்வாறாக செய்வதாக பாஜக விமர்சித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 312 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்நிலையில், உத்தரப் பிரதேச தேர்தல் தொடர்பாக 7 முன்னணி ஊடகங்கள் கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளன.

7 முன்னணி ஊடகங்களின் கருத்து கணிப்புகளை ஒப்பிடும் போது சராசரியாக பாஜக கூட்டணி 235-249, சமாஜ்வாதி கூட்டணி 137-147, பகுஜன் சமாஜ் 7-13, காங்கிரஸ் 3-7 தொகுதிகளை கைப்பற்றக்கூடும்.

உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 202 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஏழு முன்னணி ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளில் பாஜக கூட்டணிக்கே வெற்றிவாய்ப்பு இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கருத்துக் கணிப்புகளை ஊடகங்களில், பொது வெளிகளில் வெளியிடுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி வெளியிட்ட அறிக்கையில், "சமாஜ்வாதி கட்சியின் உ.பி. பிரிவு தலைவர் நரேஷ் உத்தம் படேல், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 7ல் தான் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ல் நடைபெறும். அப்படியிருக்க சில தொலைக்காட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களை திசைத்திருப்புவது போல் கருத்துக் கணிப்புகளை ஊடகங்களில் வெளியிடுகிறது. எனவே இவற்றை உடனடியாகத் தடுத்து நேர்மையான, நியாயமான, நடுநிலைமையான வகையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி கூறுகையில், "தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டதால் அகிலேஷ் விரக்தியில் இவ்வாறு செய்கிறார்" எனக் கிண்டலடித்துள்ளார்.

அந்த 7 முன்னணி நிறுவனங்களின் கருத்துக் கணிப்பு இதுதான்: ஏபிபி நியூஸ், சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 223-235 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கூட்டணி 145-157 இடங்களைக் கைப்பற்றும். பகுஜன் சமாஜ் 8-16, காங்கிரஸ் 3-7 இடங்களை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 230-235, சமாஜ்வாதி கூட்டணி 160-165, பகுஜன் சமாஜ் 2-5, காங்கிரஸ் 3-7 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் டிவி, பி மார்க் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 252-272, சமாஜ்வாதி கூட்டணி 111-131, பகுஜன் சமாஜ் 8-16, காங்கிரஸ் 3-9 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நியூஸ் எக்ஸ், போல்ஸ்டாரட் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 235-245, சமாஜ்வாதி கூட்டணி 120-130, பகுஜன் சமாஜ் 13-16, காங்கிரஸ் 4-5 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ், வீட்டோ இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 227-254, சமாஜ்வாதி கூட்டணி 136-151, பகுஜன் சமாஜ் 8-14, காங்கிரஸ் 6-11 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி, டிசைன்பாக்ஸ்டு நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 245-267, சமாஜ்வாதி கூட்டணி 125-148, பகுஜன் சமாஜ் 5-9, காங்கிரஸ் 3-7 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா நியூஸ், ஜன் கி பாத் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 226-246, சமாஜ்வாதி கூட்டணி 144-160, பகுஜன் சமாஜ் 8-12, காங்கிரஸ் 0-1 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இப்படியாக 7 கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக இருக்க சமாஜ்வாதி கண்டனக் குரலை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x