Published : 22 Jan 2022 09:17 PM
Last Updated : 22 Jan 2022 09:17 PM

5 மாநில தேர்தல்: பொதுக்கூட்டங்கள், பேரணிக்கான தடையை நீட்டித்த தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: தேர்தல் பொது கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான தடையை ஜனவரி 31 ஆம் தேதி வரை இந்திய தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்துக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், தலைமை தேர்தல் அதிகாரிகள், சுகாதாரத்துறை செயலாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில் தலைமை தேர்தல் ஆணையர் உடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளரும் கலந்துகொண்டார்.

அவர்கள், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தற்போதைய கரோனா நிலவரம் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர். மேலும் தேர்தல் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. தற்போதுள்ள சூழலில் தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து தேர்தல் ஆணையம் விவாதித்தது.

அனைத்துத் தரப்பு அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்டபின்பு, தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், "2022 ஜனவரி 31 ஆம் தேதி வரை பொதுக்கூட்டம், பாதயாத்திரை, சைக்கிள் மற்றும் பைக் பேரணி மற்றும் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை. முதல்கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஜனவரி 27 ஆம் தேதி இறுதி செய்யப்படுவதால், அரசியல் கட்சிகள் அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் திறந்தவெளியில் அதிகபட்சம் 500 பேர் அல்லது மைதானத்தின் கொள்ளளவில் 50 சதவீதம் அல்லது மாவட்ட நகராட்சி நிர்வாகம் அனுமதிக்கும் எண்ணிக்கையில் ஜனவரி 28 ஆம் தேதி முதல் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை கூட்டங்களை நடத்திக் கொள்ளலாம்.

2ம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் ஜனவரி 31 ஆம் தேதி இறுதி செய்யப்படுவதால், அரசியல் கட்சிகள் அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை, மேலே கூறப்பட்ட நிபந்தனைகள் படி கூட்டங்களை நடத்தி கொள்ளலாம். வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்வோர் எண்ணிக்கையையும் அதிகரிக்கப்படுகிறது. அதன்படி, 5 நபர்களுக்கு பதிலாக, தற்போது 10 பேர் வரை (பாதுகாவலர் நீங்கலாக) வீடு வீடாகச் சென்று இனி பிரச்சாரம் செய்யலாம்.

உள்அரங்கு கூட்டங்களில் அதிகபட்சம் 300 பேர் அல்லது அரங்க இருக்கைகளில் 50 சதவீதம் பேர் பங்கேற்க ஏற்கனவே தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. பிரச்சாரத்துக்கான வீடியோ வேன்களை திறந்த வெளியில் அதிகபட்சம் 500 பார்வையளர்களுடன் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தனியாக அனுப்பப்பட்டுள்ளன.

தங்கள் கூட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்" என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x