Last Updated : 21 Jan, 2022 12:28 PM

 

Published : 21 Jan 2022 12:28 PM
Last Updated : 21 Jan 2022 12:28 PM

235 நாட்களில் இல்லாத அளவு கரோனா சிகிச்சையில் இருப்போர் அதிகரிப்பு: தினசரி தொற்றும் 3.50 லட்சத்தை நெருங்கியது

கோப்புப்படம்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 235 நாட்களில் இல்லாத அளவாக கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 3.47 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 85 லட்சத்து 66 ஆயிரத்து 27 ஆக ஆதிகரித்துள்ளது.

கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 235 நாட்களில் இல்லாத அளவாக 20 லட்சத்து 18 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 703 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 88 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 5.23 சதவீதமாகவும், குணமடைந்தோர் 93.50 சதவீதமாகவும் குறைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 94,774 பேர் புதிதாக சிகிச்சையில் சேர்ந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 777 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனா வைரஸ் அதிகரிக்கும் நேரத்தில் ஒமைக்ரான் பரவலும் அதிகரித்துள்ளது. இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு 9,692 ஆக அதிகரத்துள்ளது. ஏறக்குறைய 4.36 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19 லட்சத்து 35 ஆயிரத்து 912 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. 2020-ம் ஆண்டிலிருந்து இதுவரை 71.15 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 160.43 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன'' என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x