Published : 21 Jan 2022 10:21 AM
Last Updated : 21 Jan 2022 10:21 AM

50 ஆண்டு காலமாக ஒளிர்ந்த அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படுகிறது: காங்கிரஸ் கடும் கண்டனம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் கடந்த 50 ஆண்டுகளாக ஒளிர்ந்து வரும் அமர் ஜவான் ஜோதியை அணைத்துவிட்டு, அதனை தேசிய போர் நினைவு சின்னத்தில் இருக்கும் ஜோதியுடன் ஐக்கியமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன..

இந்தியா கேட், சர் எட்வின் லூட்டியன்ஸ் வடிவமைத்தது. கடந்த 1931 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி லார்ட் இர்வினால் இது திறந்து வைக்கப்பட்டது. 1914 முதல் 1921 வரை முதல் உலகப்போரில் வீர மரணம் அடைந்த 70000 வீரர்களை நினைவு கூரும் வகையில் இந்தியா கேட் அமைக்கப்பட்டது.

பின்னர் 1971 போர் நினைவாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, போரில் உயிர் நீத்த வீரர்கள் நினைவாக இங்கு அமர் ஜவான் ஜோதியை நிறுவினார்.

இப்போது போரின் 50 ஆண்டுகளை கொண்டாடிய நிலையில், அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்குப் பதிலாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவிடத்தில் அந்த ஜோதி ஐக்கியமாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போர் நினைவிடமானது, 2019 ஆம் ஆண்டு இந்தியா கேட் பகுதிக்கு அருகிலேயே சி ஹெக்ஸகன் பகுதியில் அமைக்கப்பட்டது. இந்த நினைவிடத்தில் சுதந்திரத்துக்குப் பின்னர் உயிர் நீத்த வீரர்கள் 22,550 பேர் பொரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு குடியரசு தின விழாவின் போதே எப்போதும் அமர் ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்தும் மரபை மாற்றிய பிரதமர் நரேந்திர மோடி புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் இந்தாண்டு குடியரசு தின விழாவிற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள சூழலில் இன்று அமர் ஜவான் ஜோதி நிரந்தரமாக அணைக்கப்படுகிறது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இந்த ஜோதியை அணைக்கும் நிகழ்வு பாதுகாப்பு துறை மூலம் நடத்தப்படுகிறது.
இரண்டு ஜோதிகளை பராமரிப்பது கடினமாக இருப்பதால் ஒன்றாக ஐக்கியமாக்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி கண்டனம்: இந்நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "ராணுவ வீரர்களுக்காக 50 ஆண்டாக தொடர்ந்து ஒளிர்ந்து வந்த அமர் ஜவான் ஜோதியை மீண்டும் ஒளிரவைப்போம். சிலரால் தேசபக்தியையும், தியாகத்தையும் புரிந்துகொள்ள முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x