Published : 20 Jan 2022 08:08 PM
Last Updated : 20 Jan 2022 08:08 PM

கேரளாவில் 46 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா ஒருநாள் பாதிப்பு: ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு விதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒருநாள் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 46,387 ஆக உள்ளது.

கரோனா மூன்றாம் அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் கரோனா மூன்றாம் அலை பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்று கரோனா பாதிப்பு 34,199 என்று இருந்த நிலையில் இன்று புதிதாக 46,387 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுக்கும் இன்றுக்கும் உள்ள வித்தியாசம் 12,188. இதில் அதிகபட்சமாக, கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் 9,720 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல், எர்ணாகுளம் - 9,605, கோழிக்கோடு - 4,016, திருச்சூர் - 3,627, கோட்டயம் - 3,091, கொல்லம் - 3,002, பாலக்காடு - 2,268, மலப்புரம் - 2,259, கண்ணூர் - 1,973, ஆலப்புழா - 1,926, பத்தனம்திட்டா - 1,497, இடுக்கி - 1,441, காசர்கோடு - 1,135 மற்றும் வயநாடு - 827 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 32 பேர் கரோனா காரணமாக இன்று உயிரிழந்துள்ளனர் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக கேரளாவில் வரும் 23 மற்றும் 30 தேதிகளில் (அடுத்த இரண்டு ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு விதித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா தொடர்பாக இன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊரடங்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை முதல் கேரளத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்படுவதோடு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழகம் போன்ற பிற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு கேரளத்தில் விதிக்கப்படாது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக மாவட்டங்களில் நோய்ப் பரவலைப் பொறுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படவும், கட்டுப்பாடுகள் குறித்து முடிவெடுக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி அளித்துள்ளது கேரள அரசு.

6 மாநிலங்களில் கரோனா நிலைமை மோசம்:

டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கரோனா மூன்றாம் அலை மிக மோசமான நிலையில் உள்ளது என மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் கவலை தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆறு மாநிலங்களுக்கும் மத்தியக் குழுவை அனுப்பி நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x