Published : 20 Jan 2022 05:47 AM
Last Updated : 20 Jan 2022 05:47 AM

2 நாட்களாக நடந்த அமலாக்கத்துறை சோதனை: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் வீடுகளில் ரூ.8 கோடி பறிமுதல்

சண்டிகர்

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் வீடுகளில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.8 கோடியும் மற்றொரு இடத்தில் நடந்த சோதனையில் ரூ.2 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது.

பஞ்சாபில் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரிகள் மீதும், அவற்றுடன் தொடர்புடையவர்கள் மீதும் கடந்த 2018-ம் ஆண்டில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், பண பரிமாற்ற மோசடி புகாரின் பேரில் அமலாக்கத் துறையினரும் கடந்த நவம்பரில் தனியாக வழக்கு பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங் ஹானி என்பவருடன் வியாபாரத் தொடர்புடைய குத்ராதீப் சிங் என்பவரிடம் அமலாக்கத் துறையினர் சமீபத்தில் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், பூபிந்தர் சிங்குக்கு சொந்தமான சண்டிகர், மொகாலி, லூதியானா, பதான்கோட் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது பூபிந்தர் சிங்குக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அவருடன் தொடர்புடைய சந்தீப் குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின்போது மொத்தம் ரூ.10 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்த பூபிந்தர் சிங் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை விரைவில் சம்மன் அனுப்பும் என்று அதிகாரிகள் கூறினர்.

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், பஞ்சாப் முதல்வரின் மருமகன் வீட்டில் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனது மருமகன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து முதல்வர் சரண்ஜித் சிங் கூறும்போது, ‘‘தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினருக்கு நெருக்கடி தருவதற்காக இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன. மேற்கு வங்க தேர்தலின்போது மம்தா பானர்ஜியின் உறவினர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல, இப்போது எனக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கு நெருக்கடி தருவதற்காக சோதனை நடத்தப்படுகிறது. எந்த நெருக்கடியையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பண மோசடி வழக்குக்கும் எனக் கும் எந்த தொடர்பும் இல்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x