Published : 29 Apr 2016 06:05 PM
Last Updated : 29 Apr 2016 06:05 PM
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 8-ம் தேதி அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற குறிப்பிட்ட தலைவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும். கடந்த ஓராண்டில் போப் பிரான்சிஸ், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் மட்டுமே அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றி உள்ளனர்.
இப்போது மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது சீனா மற்றும் பாகிஸ்தான் வட்டாரங்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக அமெரிக்க அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பெருங்கடலில் சீனா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் கடந்த 1962 போருக்குப் பிறகு எல்லையில் பதற்றத்தை தணிக்க சீனா ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகளில் அந்த நாட்டு ராணுவம் அடிக்கடி ஊடுருவி வருகிறது.
எனவே சீனாவின் ஆதிக்கம், அராஜகத்தை கட்டுப்படுத்த அமெரிக்காவும் இந்தியாவும் அண்மைக் காலமாக மிகவும் நெருக்கமாகி வருகின்றன. அதன் ஒருபகுதியாக அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பால் ரேயான் அண்மையில் மோடிக்கு கடிதம் அனுப்பினார். அதில் வரும் ஜூன் 8-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கு முன்பு 1985 ஜூலை 13-ல் ராஜீவ் காந்தி, 1994 மே 18-ல் நரசிம்மராவ், 2000 செப்டம்பர் 14-ல் வாஜ்பாய், 2005 ஜூலை 19-ல் மன்மோகன் சிங் ஆகியோர் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி உள்ளனர். அந்த பட்டியலில் நரேந்திர மோடியும் இணைய உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT