Published : 19 Jan 2022 07:02 AM
Last Updated : 19 Jan 2022 07:02 AM

ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தம் காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட மோசடி உடன்பாடு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தம் மோசடியானது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ஒட்டி நேற்று செய்தியாளர் களுக்கு அவர் அளித்த பேட்டி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2005-ம் ஆண்டு இஸ்ரோவின் வர்த்தக பிரிவான ஆன்ட்ரிக்ஸ், தனியாருக்கு சொந்தமான தேவாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. ஆன்ட்ரிக்ஸிடமிருந்து எஸ் பேண்ட் அலைக்கற்றைகளை தேவாஸ் நிறுவனம் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்தது. இது மோசடி ஒப்பந்தம். இந்திய மக்களையும், இந்தியாவையும் ஏமாற்றும் ஒப்பந்தம்.

நாட்டின் வளங்களை குறிப்பாக அலைக்கற்றை, செயற்கைக்கோள் மற்றும் அலைவரிசை உள்ளிட்டவற்றை தனியாருக்கு விற்பனை செய்து பணம் பெறுவதற்காக போடப்பட்ட ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் நிகழ்ந்த முறைகேடு காரணமாக மன்மோகன் அரசு 2011-ல் இதை ரத்து செய்தது.

இதை எதிர்த்து தேவாஸ் நிறுவனம் சர்வதேச தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. ஆனால் இதை எதிர்கொள்வதற்கு மத்தியஸ்தரை அரசு நியமிக்கவேயில்லை. 21 நாட்களுக்குள் மத்தியஸ்தரை நியமிக்க வேண்டும் என்று நினைவூட்டப்பட்டும் அரசு நியமிக்கவில்லை.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசு எந்த அளவுக்கு தவறானநடைமுறைகளை செயல்படுத்தி யுள்ளது என்பதை தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது. ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம் தேசிய பாதுகாப்புக்கு எதிரானதாகும். மிகப் பெரிய அளவிலான மோசடியை வெறுமனே தரைவிரிப்புக்குக் கீழே மறைத்துவிட முடியாது என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் சர்வதேச வர்த்தக ரீதியிலானது. இதனால் இது நெதர்லாந்திலுள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. மேலும் இந்தியா-மொரீஷியஸ் மற்றும் இந்தியா - ஜெர்மனி பரஸ்பர முதலீடு உடன்பாடு காரணமாக இது சர்வதேச முக்கியத்துவம் பெற்ற ஒப்பந்தமாக மாறியது. இதில் வழங்கப்பட்ட ஒவ்வொரு தீர்ப்பும் இந்திய அரசுக்கு எதிரானதாக அமைந்தது.

இதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x