Published : 17 Jan 2022 01:53 PM
Last Updated : 17 Jan 2022 01:53 PM

விடுதியின் 7-வது மாடியில் இருந்து குதித்து ஐஐடி மும்பை மாணவர் தற்கொலை

மும்பை: ஐஐடி மும்பையில் படித்துவரும் மாணவர் ஒருவர் கல்லூரியின் வளாகத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐஐடி எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மும்பையில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் இன்று வளாகத்தில் அமைந்துள்ள விடுதி கட்டிடத்தின் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இன்று அதிகாலை நடந்த இந்தச் சம்பவம் கல்லூரி வளாகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதிக்கு வெளியே இருந்த காவலாளி ஒருவரால் அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, போலீஸுக்கு இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தர்ஷனின் உடல் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அங்கு கொண்டு செல்லப்படும் முன்பாகவே மாணவர் தர்ஷன் இறந்துவிட்டார்.

இதனையடுத்து போலீஸ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில், தர்ஷன் மாளவியா என்ற அந்த மாணவன் தனது தற்கொலை தொடர்பாக கடிதம் ஒன்றையும் எழுதி விடுதியின் தகவல் பலகையில் அதனை ஒட்டிவைத்துள்ளது தெரியவந்தது. அந்தக் கடிதத்தில் "எனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை" என்று குறிப்பிடவும் செய்துள்ளார். அதேநேரம், இறந்த மாணவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி கடந்த சில மாதங்களாக அதற்காக சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். கடந்த ஜூலை மாதம்தான் ஐஐடி மும்பையில் முதுகலை படிப்பில் இணைந்துள்ளார். தற்போது அவரின் குடும்பத்தினருக்கு இறந்த தகவல் சொல்லப்பட்டு மும்பைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x