Published : 17 Jan 2022 07:42 AM
Last Updated : 17 Jan 2022 07:42 AM

புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் காலமானார்

புதுடெல்லி: கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் காலமானார். அவருக்கு வயது 83.

நேற்றிரவு, டெல்லியில் உள்ள தனது வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். வீட்டில் உள்ளோர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பண்டிட் பிர்ஜு மகாராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். சமீப காலமாக சிறுநீரகக் கோளாறு காரணமாக பிர்ஜு மகாராஜ் டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்ம விருது பெற்றவர்: கதக நடனக் கலைஞர்களின் மகாராஜ் குடும்பத்தைச் சேர்ந்த பிர்ஜு மகாராஜின் தந்தை அச்சன் மகாராஜ், மாமன்மார்கள் சாம்பு மகாராஜ், லச்சு மகாராஜ் ஆகியோரும் தலைசிறந்த கதக் நடனக் கலைஞர்களாவர். பிர்ஜு மகாராஜ் தனது திறமைக்காக நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதைப் பெற்றார்.

பண்டிட் ஜி, மகாராஜ் ஜி என்ற வாஞ்சையோடு அழைக்கப்படும் பண்டிட் மகாராஜ், சிறந்த ட்ரம்ஸ் இசைக் கலைஞரும் கூட. தவிர அவர் தபளா வாத்தியக் கருவியையும் வாசிக்கக் கூடியவர். தும்ரி, தாத்ரா, பஜன், கஸல் போன்ற வடிவிலான பாடல்களை மிகச் சிறந்த முறையில் நேர்த்தியாகப் பாடக்கூடியவர்.

அது தவிர, சிறந்த கதை சொல்லி. வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை மிக சுவாரஸ்யமாக சொல்லக் கூடிய கதை சொல்லி. அதனாலேயே அவர் இருக்கும் இடத்தில் ஒரு சிறு ரசிகர் கூட்டம் அவரைச் சுற்றி சூழ்ந்து கொள்ளும்.

உனைக் காணாத நானும்: கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் உனைக் காணாத நானும்.. என்ற பாடலில் கதக் நடனம் இடம்பெற்றிருக்கும். அந்தப் பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்தவர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் தான். மேலும், நடிகர் கமல்ஹாசன், அவரிடம் தான் கதக் நடனம் கற்றுக்கொண்டார். எப்போதுமே பண்டிட் பிர்ஜு மகாராஜை அவர் கொண்டாடுவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x