Last Updated : 16 Jan, 2022 05:39 PM

 

Published : 16 Jan 2022 05:39 PM
Last Updated : 16 Jan 2022 05:39 PM

முலாயமின் மருமகள் அபர்னா யாதவ் பாஜகவில் சேருகிறார்: உ.பி. அமைச்சர்கள், எம்எல்ஏக்களை இழுத்த சமாஜ்வாதிக்கு பின்னடைவு

புதுடெல்லி: முலாயம்சிங் யாதவின் மருமகளான அபர்னா யாதவ் பாஜகவில் சேர இருப்பதாகத் தெரிந்துள்ளது. இது, பாஜகவின் மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்த சமாஜ்வாதி கட்சிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

உ.பி.யின் முன்னாள் முதல்வருமான முலாயம்சிங்கின் கடைசி மகனான பிரதீக் யாதவின் மனைவியாக இருப்பவர் அபர்னா யாதவ். இவர் கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் தலைநகரான லக்னோவின் ராணுவக் குடியிருப்பு தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.

ஆனால், காங்கிரஸிலிருந்து பாஜகவிற்கு சென்று போட்டியிட்ட ரீட்டா பகுகுணா ஜோஷியிடம் தோல்வி அடைந்தார் அபர்னா. இந்நிலையில், அபர்னா யாதவ் எந்நேரமும் பாஜகவில் இணைய இருப்பதாகத் தகவல்கள் பரவியுள்ளன.

இவரது தந்தையான ஹரி ஓம் யாதவ் சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் ஏற்கெனவே பாஜகவில் இணைந்து விட்டார். இவர் மூலமாக பாஜக பேசி மகள் அபர்னாவை தம் கட்சிக்குள் இழுப்பதாகக் கருதப்படுகிறது.

இதுபோல், அபர்னா யாதவ் பாஜகவுடன் சாய்வது புதியதல்ல. இவர், மார்ச் 19-ல் முதல்வராக யோகி ஆதித்யநாத்தை பதவி ஏற்றதும் அவரை முதன்முறையாகச் சந்தித்தார்.

இதற்காக யோகியின் சொந்த மாநிலமான உத்தராகண்டை தானும் சேர்ந்தவர் என்பதை பயன்பத்தினார் அபர்னா. இவருடன், அவரது கணவர் பிரதீக் யாதவ் மற்றும் முலாயமின் இரண்டாவது மனைவியான சாதனா குப்தாவும் உடன் சென்றிருந்தனர்.

மரியாதை நிமித்தமாக நடந்ததாகக் கூறப்பட்ட இதில், தம் பசு பராமரிப்பகத்திற்கு வருகை தருமாறு அபர்னாவால் அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்ற யோகி மறுநாள் லக்னோவில் அபர்னாவின் பசு பராமரிப்பகத்திற்கு நேரில் சென்றது சர்ச்சையை கிளப்பி இருந்தது.

2017 தேர்தலுக்கு முன்பாக சமாஜ்வாதியில் ஏற்பட்ட குடும்ப மோதலுக்கு பின் அக்கட்சி முழுமையாக முலாயமின் மகனான முதல்வர் அகிலேஷின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தது. இதனால், தமது செல்வாக்கை நிரூபிக்க அபர்னா அப்போது, உ.பி. முதல்வர் யோகியின் உதவியை நாடியிருந்ததாகக் கூறப்பட்டது.

இதேவகையில், தனது செல்வாக்கை நிரூபிக்க முதல்வர் யோகி, தன் பிறந்த மாநிலத்தை சேர்ந்த அபர்னாவை உதவியை கேட்டிருப்பதாகவும் கருதப்படுகிறது. ஏனெனில், இருதினங்களுக்கு முன் தனது அமைச்சரவையிலிருந்த முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் மவுரியா உள்ளிட்ட மூவரை சமாஜ்வாதிக்கு இழுத்திருந்தார் அகிலேஷ்சிங்.

இதற்கு ஈடாகத் தன் பங்கிற்கு இப்போது பாஜக, சமாஜ்வாதி குடும்பத்திலிருந்து அபர்னாவை இழுக்கிறது. இதன் மீதான சர்ச்சைகள் மற்றும் விவாதங்களுடன் உ.பி.வாசிகள் தம் சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x