Published : 16 Jan 2022 03:23 PM
Last Updated : 16 Jan 2022 03:23 PM

பாஜகவில் இணையும் முன்னாள் அதிகாரிகள்; தேர்தல் ஆணையத்துக்கு அகிலேஷ் சரமாரி கேள்வி

லக்னோ: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் பாஜகவில் இணைந்து வரும் நிலையில் இதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கான்பூர் காவல்துறை ஆணையரான அசீம் அருண் ஐபிஎஸ், கடந்த மாதம் கட்டாய ஓய்வு பெற்றார். இவர் இன்று அதிகாரபூர்வமாக பாஜகவில் இணைந்துள்ளார். கான்பூரின் அருகிலுள்ள கன்னோஜ் நகர தொகுதியில் அசீம் அருண் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மக்களவை தொகுதியில் உ.பி.யின் முன்னாள் முதல்வர் அகிலேஷ்சிங் எம்.பி.யாக இருந்தவர். யாதவர்கள் அதிகமுள்ள கன்னோஜ், சமாஜ்வாதி ஆதரவு தொகுதியாகக் கருதப்படுகிறது.

இங்கு அசீமிற்கு கடும் போட்டி இருக்கும் சூழலும் நிலவுகிறது. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அசீம், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பணியால் கவர்ந்து இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்திருந்தார். இதுமட்டுமின்றி முன்னாள் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அசிம் அருண் பாஜகவில் இணைந்ததற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘‘அசிம் அருணுடன் பாஜகவில் இணைந்த அனைத்து அதிகாரிகளையும் நீக்க தேர்தல் ஆணையத்தில் புகார் செய்வேன். இந்த விவகாரத்தை விசாரிக்காவிட்டால் தேர்தல் ஆணையம் மீது கேள்விகள் எழும். தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படுகிறது என்பதை நாங்கள் நம்ப மாட்டோம்’’ எனக் கூறினார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x