Published : 15 Jan 2022 06:45 PM
Last Updated : 15 Jan 2022 06:45 PM

இந்தியாவின் புதிய தொழில்களின் பொற்காலம் இப்போது தொடங்கியுள்ளது: பிரதமர் மோடி நம்பிக்கை

புதுடெல்லி: இந்த நூற்றாண்டின் அதிக முதலீட்டு புதியதொழில் நிறுவனங்களை தொடங்குவதை நோக்கி இந்தியா இன்று துரிதமாக செல்கிறது, இந்தியாவின் புதிய தொழில்களின் பொற்காலம் இப்போது தொடங்கிருப்பதாக நான் நம்புகிறேன் என பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி ஸ்டார்ட்அப் தொழில்முனைவோருடன் இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டின் அனைத்து புதிய தொழில்களையும் புதியன கண்டுபிடிக்கும் அனைத்து இளைஞர்களையும் நான் வாழ்த்துகிறேன். இவர்கள் தான் உலகின் புதிய தொழில்களில் இந்தியாவின் கொடியை ஏற்றுகிறார்கள். இந்த கலாச்சாரம் நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கும் செல்வதற்காக ஜனவரி 16-ஐ தேசிய புதிய தொழில்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்புகளையும் புதிய தொழில்முனைவோரையும் புதிய தொழில்கள் சூழலையும் வலுப்படுத்த இந்தப் புத்தாண்டில் அரசு செய்திருக்கும் மாபெரும் மாற்றங்களின் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. முதலாவதாக அரசு நடைமுறை மற்றும் அதிகார வர்க்கத்தின் வலையிலிருந்து புதிய தொழில் முனைவோர்களையும் புதிய கண்டு பிடிப்பாளர்களையும் விடுவிப்பது.

இரண்டு ,புதிய கண்டுபிடிப்பை மேம்படுத்த நிறுவனமயமான நடைமுறையை உருவாக்குவது. மூன்றாவதாக இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கும் இளம் தொழில் முனைவோர்களுக்கும் உதவி செய்தல். இந்த முயற்சிகளின் பகுதியாக தொடங்குக இந்தியா நிமிர்ந்து நில் இந்தியா போன்ற திட்டங்கள் உள்ளன.

கூடுதல் வரி பிரச்சனையை நீக்குதல், வரி விதிப்பு முறைகளை எளிமையாக்குதல், அரசு நிதி உதவிக்கு ஏற்பாடு செய்தல், 9 தொழிலாளர் மற்றும் 3 சுற்றுச்சூழல் விதிகளுக்கு சுயசான்றிதழ் அளிக்க அனுமதித்தல், 25 ஆயிரத்திற்கும் அதிகமான வரிமுறைகளை நீக்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுப்பது அதிகரிக்கும். அரசு இ சந்தையின் புதிய தொழில் நிறுவனங்கள் அரசுக்கு சேவைகள் வழங்க வசதி செய்யப்படும்.

குழந்தை பருவத்திலிருந்தே மாணவர்களிடையே புதிய கண்டுபிடிப்புக்கான ஈர்ப்பை உருவாக்குவதன் மூலம் நாட்டின் கண்டுபிடிப்பை அரசின் முயற்சி நிறுவனமயமாக்கும். 9000- க்கும் அதிகமான அடல் தொழிற் சோதனைக் கூடங்கள் பள்ளிகளின் கண்டு பிடிப்பு வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குகின்றன. புதிய யோசனைகளுடன் செயல்படவைக்கின்றன.

புதிய ட்ரோன் விதிகளாகட்டும் அல்லது புதிய விண்வெளி கொள்கையாகட்டும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளை எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு இளைஞர்களுக்கு வழங்க அரசு முன்னுரிமை அளிக்கிறது. அறிவுசார் சொத்துரிமைகள் பதிவு தெடர்பான விதிகளையும் கூட நமது அரசு எளிமைப்படுத்தி உள்ளது.

புதிய கண்டு பிடிப்புகளுக்கான அறிகுறிகள் ஏராளமான அளவு உயர்ந்திருக்கிறது. 2013-14-ல் 4000 காப்புரிமைகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டன. கடந்த ஆண்டு 28000 க்கும் அதிகமான காப்புரிமைகள் அனுமதிக்கபட்டுள்ளன. 2013-14-ல் 70000 வர்த்தக குறியீடுகள் பதிவு செய்யப்பட்டன; 2020-21-ல் 2.5 லட்சத்திற்கும் அதிகமான வர்த்தக குறியீடுகள் பதிவு செய்யப்பட்டன.

2013-14-ல் 4000 பதிப்புரிமைகள் மட்டுமே அளிக்கப்பட்டன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 16000-ஐ கடந்தது. புதிய கண்டுபிடிப்பிற்கான இந்திய இயக்கத்தின் விளைவாக உலகளாவிய புதிய கண்டுபிடிப்பு குறியீட்டு தரவரிசையில் இந்தியா முன்னேறி உள்ளது. ஏற்கெனவே 81 புள்ளிகளில் இருந்த இந்தியா தற்போது 46வது இடத்திற்கு வந்துள்ளது

இந்தியாவின் புதிய தொழில்கள் 55 தனி தொழில்களாக செயற்பட்டு வருகின்றன. 5 ஆண்டுகளுக்கு முன் 500க்கும் குறைவாக இருந்த இந்திய தொழில்களின் எண்ணிக்கை அதிகரித்து இன்று 60000க்கும் அதிகமாக உள்ளது. நமது புதிய தொழில்கள் போட்டியின் விதிகளை மாற்றிக்கொண்டிருக்கின்றன. அதனால் புதிய இந்தியாவின் முதுகெலும்பாக புதிய தொழில்கள் இருக்கப்போவதாக நான் நம்புகிறேன்.

கடந்த ஆண்டு நாட்டில் 42 அதிக முதலீட்டு புதிய தொழில்கள் வந்துள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிறுவனங்கள் இந்தியாவின் தற்சார்பு , தன்னம்பிக்கையின் அடையாளமாகும். இந்த நூற்றாண்டின் அதிக முதலீட்டு புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவதை நோக்கி இந்தியா இன்று துரிதமாக செல்கிறது. இந்தியாவின் புதிய தொழில்களின் பொற்காலம் இப்போது தொடங்கிருப்பதாக நான் நம்புகிறேன்.

தற்போது நாட்டின் 625 மாவட்டங்க ளி ல் ஒவ்வொன்றிலும் குறைந்த பட்சம் ஒரு புதிய தொழிலாவது உள்ளது. பாதிக்கும் அதிகமான புதிய தொழில்கள் இரண்டாம் நிலை ,மூன்றாம் நிலை நகரங்களிலிருந்து வந்திருக்கிறது.

இதனால் சாதாரண ஏழைக் குடும்பத்தினர் வர்த்தகர்களாக மாற்றப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான இளம் இந்தியர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்தியாவின் பன்முகத்தன்மை முக்கிய பலமாக இருக்கிறது. இந்தியாவின் உலகளாவிய அடையாளத்திற்கு முக்கியமானதாக உள்ளது. இந்தியாவின் அதிக முதலீடு கொண்ட தொழில்களும் புதிய தொழில்களும் இந்த பன்முக தன்மையின் செய்திகளாகும்.

இந்தியாவை சேர்ந்த புதிய தொழில்கள் எளிதாக உலகின் மற்ற நாடுகளுக்கு செல்ல முடியும். எனவே உங்கள் கனவுகளை உள்ளூருக்கு உரியதாக வைத்திருக்காமல் அவற்றை உலகுக்கானதாக மாற்றுங்கள். இந்த மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள். இந்தியாவுக்காக புதியன கண்டு பிடிப்போம், இந்தியாவிலிருந்து புதியன கண்டுபிடிப்போம்.

பல துறைகளின் புதிய தொழில் சூழல் முக்கிய பங்காற்ற முடியும். தேசிய பெருந்திட்டமான பிரதமரின் விரைவு சக்தியில் உள்ள கூடுதல் இடத்தை மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் அடிப்படை கட்டமைப்புக்கு பயன்படுத்த முடியும். இதேபோல் பாதுகாப்பு தளவாட உற்பத்தி சிப் உற்பத்தி போன்ற பிரிவுகள் பல வாய்ப்புகளை வழங்கும். புதிய ட்ரோன் கொள்கைக்கு பின் பல முதலீட்டாளர்கள் ட்ரோன் தொழிலில் முதலீடு செய்வதாக அவர் கூறினார். ட்ரோன் தயாரிக்கும் புதிய தொழில்களுக்கு ராணுவம், கப்பற்படை விமானப்படை ஆகியவை 500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களை வழங்கியுள்ளன.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x