Last Updated : 14 Jan, 2022 06:30 AM

 

Published : 14 Jan 2022 06:30 AM
Last Updated : 14 Jan 2022 06:30 AM

ராகுல் காந்தியின் அறிவுரையை ஏற்று கர்நாடகாவில் காங்கிரஸாரின் மேகேதாட்டு பாதயாத்திரை நிறுத்தம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணையை கர்நாடக அரசு உடனடியாக கட்ட வலியுறுத்தி மாநில‌ காங்கிரஸார் கடந்த 9-ம் தேதி மேகேதாட்டு நோக்கி பாத யாத்திரை தொடங்கினர். கர்நாடக காங்கிரஸ்தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்.

இதையடுத்து கரோனா விதிமுறைகளை மீறியதாக டி.கே.சிவகுமார், டி.கே.சுரேஷ் உட்பட 64 காங்கிரஸ் தலைவர்கள் மீது அரசு வழக்குப் பதிவு செய்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ''தொற்று வேகமாக பரவிவரும் வேளையில் கரோனா கட்டுப்பாட்டுவிதிமுறைகளை மீறி காங்கிரஸார் பாத யாத்திரை நடத்துவது ஏன்? இதனை அரசு எப்படி அனுமதிக்கிறது?'' என நேற்று முன் தினம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று சிவகுமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கரோனா தொற்று பரவி வரும் வேளையில் பாத யாத்திரையை தொடர்வது சரியாக இருக்காது. பாதயாத்திரையை நிறுத்துமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவகுமார் நேற்று கூறும்போது, ‘‘பாதயாத்திரைக்கு வழி நெடுகிலும் மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். இதனைக் கண்டு ஆளும் பாஜக அரசு மிரண்டு போய் உள்ளது. மக்களின் நலன் கருதி, பாத யாத்திரையை தற்காலிகமாக நிறுத்துகிறோம். கரோனா தொற்று பரவல் குறைந்த உடன் மீண்டும் பாத யாத்திரையை ராம்நகரில் இருந்து தொடர்வோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x