Last Updated : 13 Jan, 2022 05:09 PM

 

Published : 13 Jan 2022 05:09 PM
Last Updated : 13 Jan 2022 05:09 PM

'அவசரப்படாதிங்க... கோவாவிலும் மகா விகாஸ் அகாதி ஆட்சி வரட்டும்' -  காங்கிரஸுக்கு சிவசேனா தூது

புதுடெல்லி: "கோவாவில் காங்கிரஸ் கட்சியால் தனித்து வெல்ல முடியாது. மகாராஷ்டிராவில் இருப்பதுபோன்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா சேர்ந்து மகா விகாஸ் அகாதி ஆட்சி அமைக்கலாம்" என்று சிவசேனா கட்சி தூது விடுத்துள்ளது.

கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வென்றும் ஆட்சி அமைக்கமுடியாமல் போனது. பாஜக 14 இடங்களில் வென்று சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து. ஆனால், காங்கிரஸிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் கூண்டோடு பாஜகவில் சேர்ந்துவிட்டதால், தற்போது காங்கிரஸ் வசம் 3 எம்எல்ஏக்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

இந்நிலையில், கூட்டணி சேராமல் தனித்து தேர்தலில் நிற்கப்போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக இருக்கும் அலை மீதும், அரசின் மீதான வெறுப்பும் சாதகமாக அமையும் என காங்கிரஸ் கட்சி வெற்றிக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறது. ஆனால், சிவசேனா கட்சி இப்போது கூட்டணிக்கு தூது விடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி இணைந்து மகா விகாஸ் அகாதி எனும் கூட்டணி அமைத்து ஆட்சியில் உள்ளன. அதேபோன்று கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கலாம் என மறைமுகமாக சிவசேனா தூது விடுத்துள்ளது.

சிவசேனா கட்சியின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் "காங்கிரஸ் கட்சி அவசரப்படுகிறது. கோவாவில் இருக்கும் அரசியல் சூழலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட முடியாது; போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 3 எம்எல்ஏக்கள் மட்டும்தான் உள்ளனர்.

முக்கியக் கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இக்கட்டான நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளன. ஆனால், கூட்டணி குறித்து காங்கிரஸ் என்ன நினைக்கிறது எனத் தெரியவில்லை. தனித்துப் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சி ஒற்றை இலக்கத்தில்தான் சீட் வாங்க முடியும். 40 தொகுதிகளில் 30 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடட்டும், 10 தொகுதிகளை கூட்டணிக் கட்சிக்கு கொடுக்கட்டும் என்று பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், சிஎல்பி கட்சித் தலைவர் திகம்பர் காமத், கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஷ் ஆகியோரிடம் தெரிவித்தேன்.

10 தொகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் வென்றதில்லை. அந்தத் தொகுதிகளை சிவசேனா, என்சிபி, கோவா பார்வோர்ட் கட்சிக்கு ஒதுக்கலாம். கோவாவில் கூட்டணி அமைக்க ராகுல் காந்தி சாதகமாக இருக்கிறார், ஆனால், மாநிலத் தலைமைக்கு விருப்பம் இல்லாமல் இருக்கிறது.

கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் மகன் உத்பாலுக்கு ஆதரவு அளிக்க சிவசேனா தயாராக இருக்கிறது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து உத்பால் துணிச்சலான முடிவு எடுத்துள்ளார். தேர்தலில் போட்டியிட துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் முடிவை எடுத்தால் சிவசேனா ஆதரவு அளிக்கும்" என்று ராவத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x