Published : 12 Jan 2022 07:09 AM
Last Updated : 12 Jan 2022 07:09 AM

முல்லைப் பெரியாறு அணையை நிர்வகிப்பது எங்கள் வேலையல்ல: கேரளா, தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையை நிர்வகிக்க கண்காணிப்புக் குழு உள்ளது. அணையை நிர்வாகிப்பது எங்கள் வேலையல்ல என்று கேரளா, தமிழக அரசுகளை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகம் முன்கூட்டியே எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல் நள்ளிரவில் தண்ணீரை திறந்துவிடுவதாகவும் அணை பலவீனமாக இருப்பதால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்தது. தண்ணீரை திறப்பதற்கு 24 மணி நேரம் முன்பு தமிழக அரசு தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேரளா கோரியது. அணை பலமாக இருப்பதாக நிபுணர் குழு ஏற்கெனவே அறிக்கை அளித்திருப்பதாக தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்ட்டது.

ஏற்கெனவே, கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முல்லைப் பெரியாறு அணை தொடர்பான எல்லா பிரச்சினைகளுக்கும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யக் கூடாது என்றும் அரசியலுக்கு உச்ச நீதிமன்றத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று இவ்வழக்கு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், நீதிபதி தினேஷ் மகேஷ்வரி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வுசெய்யவும் அணையின் நீர்மட்டத்தை நிர்வகிக்கவும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் பணியில் நாங்கள் தலையிடமுடியாது. முல்லைப் பெரியாறு அணையை நிர்வகிப்பது எங்கள் வேலையும் அல்ல.

கேரளா, தமிழகம் மாநிலங்கள் உட்பட வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் வழக்கில் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டிய முக்கிய பிரச்சினைகளை பிப்ரவரிமாதத்துக்குள் இறுதி செய்ய வேண்டும். வழக்கின் விசாரணையை பிப்ரவரி 2-வது வாரத்துக்கு ஒத்திவைக்கிறோம். இவ்வாறு நீதிபதி கள் தெரிவித்தனர்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x