Published : 11 Jan 2022 07:20 PM
Last Updated : 11 Jan 2022 07:20 PM

உ.பி.  மாற்றம் வரும்;  13 பாஜக எம்எல்ஏக்கள் சமாஜ்வாதி கட்சிக்கு மாறுகிறார்கள்: சரத் பவார் தகவல்

லக்னோ: உ.பி.யில் பாஜகவில் மாற்றம் வரும், பாஜகவில் இருந்து மேலும் 13 எம்எல்ஏக்கள் சமாஜ்வாதி கட்சிக்கு செல்கிறார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத்பவார் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்து வரும் சுவாமி பிரசாத் மவுரியா திடீரென பதவி விலகியுள்ளார். அவர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட் ஆகிய 5 மாநில தேர்தல் தேதியை நேற்றுமுன்தினம் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10ம் ேததி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம்தேதி வரை நடக்கிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு கரோனா தொற்று காரணமாக நேரடி பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இணையம் வழியாக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், மாநிலத்தின் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் அக்கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து சுவாமி பிரசாத் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மாறுபட்ட சித்தாந்தமாக இருந்தாலும் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இணைந்து பணியாற்றினேன். ஆனால், தலித், இதர பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், வேலை இல்லாதோர், சிறு தொழிலாளர்கள் மீது கடுமையான அடக்குமுறை நடைபெறுவதால் என் பதவியை ராஜிநாமா செய்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார். பின்னர் அவர் அகிலேஷ் யாதவை சந்தித்து அந்த கட்சியில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து மூன்று எம்எல்ஏக்களான ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி மற்றும் பகவதி சாகர் ஆகியோர் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். அவர்களும் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.

இந்தநிலையில் பாஜகவைச் சேர்ந்த மேலும் 15 எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதி இணையவுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார். அகிலேஷ் யாதவுடன் உ.பி.யில் கூட்டுப் பிரச்சாரம் செய்யும் சரத் பவார் இதுகுறித்து கூறியதாவது:

உ.பி.யில் மாற்றம் வரும். இன்று மவுரியா ராஜினாமா செய்துள்ளார். அவருடன் 13 எம்எல்ஏக்கள் செல்கிறார்கள். வரும் நாட்களில் நீங்கள் பார்க்கலாம், மேலும் பலர் வெளியேறுவார்கள். அங்கு என்ன நடக்கப்போகிறது என்பது விரைவில் தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x