Published : 11 Jan 2022 08:46 PM
Last Updated : 11 Jan 2022 08:46 PM

'இழிவான மனநிலையை சித்தரிக்கிறது' - சித்தார்த்துக்கு மத்திய அமைச்சர் கண்டனம்

சாய்னா நேவாலை ஆபாசமாக பேசியதாக நடிகர் சித்தார்த் குறித்து எழுந்த சர்ச்சையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டங்களை பதிவு செய்துள்ளார்.

கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஃபெரோஸ்ர் நகருக்குச் சென்றபோது விவசாயிகளின் போராட்டத்தால் மீண்டும் டெல்லி திரும்பினார். சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

"எந்தவொரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்" என்று தனது ட்வீட்டில் சாய்னா தெரிவித்திருந்தார். சாய்னாவின் இந்தப் பதிவை டேக் செய்து நடிகர் சித்தார்த், "இறகுப்பந்து உலகின் சாம்பியன்... கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர்" என்று தெரிவித்தார்.

இந்த பதிவை ஆபாசமான வார்த்தைகளால் அவரின் ட்விட்டரில் தெரிவித்ததை அடுத்து கண்டனங்கள் எழுந்தன. கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடங்கி சிவசேனா ராஜ்யசபா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, தமிழ் சினிமாவின் சின்மயி, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா போன்ற பலர் நடிகர் சித்தார்த்துக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். சித்தார்த் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் மும்பை காவல் நிலையத்துக்கு பரிந்துரை செய்தது.

தற்போது இந்த விவகாரத்தில் சித்தார்த்துக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்துள்ளார். தன்னுடைய பதிவில், "இந்தியாவை விளையாட்டு சக்தியாக மாற்றுவதில் சாய்னாவின் சிறந்த பங்களிப்புகளுக்காக இந்தியா பெருமை கொள்கிறது. சாய்னா ஒரு தேசபக்தர், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்பதைத் தவிர, அவரைப் போன்ற ஓர் ஆளுமையைப் பற்றி மலிவான கருத்தைச் சொல்வது என்பது ஒரு நபரின் இழிவான மனநிலையை சித்தரிக்கிறது" என்று சித்தார்த்துக்கு எதிராக பேசியுள்ளார்.

இதேபோல் நடிகை குஷ்புவும், "சித்தார்த் பேச்சு மிகவும் மோசமானது. ஒரு தனிநபரிடம் உங்கள் வெறுப்பை வெளிப்படுத்தாதீர்கள் நண்பரே" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x