

லக்னோ: உத்தர பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்து வரும் சுவாமி பிரசாத் மவுரியா திடீரென பதவி விலகியுள்ளார். அவர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.
உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட் ஆகிய 5 மாநில தேர்தல் தேதியை நேற்றுமுன்தினம் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10ம் ேததி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம்தேதி வரை நடக்கிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு கரோனா தொற்று காரணமாக நேரடி பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இணையம் வழியாக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில், மாநிலத்தின் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் அக்கட்சியிலிருந்து விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் மவுரியா சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.
தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து சுவாமி பிரசாத் மவுரியா கூறியிருப்பதாவது:
மாறுபட்ட சித்தாந்தமாக இருந்தாலும் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இணைந்து பணியாற்றினேன். ஆனால், தலித், இதர பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், வேலை இல்லாதோர், சிறு தொழிலாளர்கள் மீது கடுமையான அடக்குமுறை நடைபெறுவதால் என் பதவியை ராஜிநாமா செய்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் அகிலேஷ் யாதவை சந்தித்து அந்த கட்சியில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து மூன்று எம்எல்ஏக்களான ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி மற்றும் பகவதி சாகர் ஆகியோர் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். அவர்களும் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகிய சுவாமி பிரசாத் பாஜகவில் இணைந்தார். இவரது மகள் சங்கமித்ரா, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாஜக எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார்.
சமாஜ்வாதி கட்சியில் சுவாமி பிரசாத் உள்ளிட்ட சில தலைவர்கள் இணைந்துள்ளதாக அகிலேஷ் யாதவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.