Last Updated : 11 Jan, 2022 06:17 AM

 

Published : 11 Jan 2022 06:17 AM
Last Updated : 11 Jan 2022 06:17 AM

வெளிநாட்டு பயணத்தை நீட்டித்த ராகுல் காந்தி: தேர்தல் அறிவித்த பின்பும் திரும்பாததால் காங்கிரஸார் அதிருப்தி

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டில் உயர் கல்வி பயின்றவர். அவருக்கு சர்வதேச அளவில் பல நண்பர்கள் உள்ளனர். இவரது பாட்டி, தாயான சோனியா காந்தி பிறந்து வளர்ந்த இத்தாலியில் வசிக்கிறார். இதனால், அவர் வருடந்தோறும் அவ்வப்போது வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.

கடந்த டிசம்பர் 27-ல் ஐந்து நாள் பயணமாக ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு கிளம்பினார். இவரது வருகையை எதிர்பார்த்து ஜனவரி 3-ல் பஞ்சாபின் மொகாவில் காங்கிரஸ் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இங்குதான் பிரதமர் மோடியின் வருகை ஜனவரி 5-ல் நடைபெறாமல் ரத்தானது.

பிறகு ராகுலின் பயண நீட்டிப்பால் மொகாவின் கூட்டம் ஜனவரி 15-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டமும், 15-ம் தேதி வரை நேரடியாக பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதால் நடைபெறாது.

ஐந்து மாநில தேர்தல் அறிவிப்பு வெளியாகியும் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் பயணத்தை ரத்து செய்து திரும்பாமல் இருப்பதால் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஏனெனில், 5 மாநிலங்களில் பஞ்சாபில் தன் ஆட்சியை தக்க வைப்பதுடன், உத்தராகண்ட் மற்றும் கோவாவில் விட்ட ஆட்சியை பிடிக்கும் வாய்ப்புகள் காங்கிரஸுக்கு உள்ளன.

உத்தர பிரதேசம் மற்றும் கோவாவில் காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா பொறுப்பேற்றதால் மற்ற மூன்றில் ராகுலின் பங்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், ‘தேர்தல் நேரத்தில் கட்சி நடவடிக்கைகளில் எதிர்காலத் தலைவர் ராகுல் விலகி இருப்பது பலருக்கும் அதிருப்தியை தந்துள்ளது. இவர்களுக்கு பதிலளிப்பதே டெல்லி தலைமையின் பெரும் பணியாகி விட்டது. சட்டப்பேரவை தேர்தல் என்பதால் மாநிலத் தலைவர்களே வேட்பாளர் தேர்வில் முக்கியப் பங்கு வகிப்பார்கள். இதன் இறுதி அறிவிப்பு ஜனவரி 15-க்கு பிறகு நடக்கும் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்துக்கு முன்பாக ராகுல் காந்தி வந்து விடுவார்‘’’ என்று தெரிவித்தனர்.

கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யானராகுல் இதுபோல், வெளிநாடு களுக்கு முக்கிய சமயங்களில் செல்வது முதன்முறையல்ல. கடந்த டிசம்பர் 2020-ல் கடைசி வாரத்திலும் இத்தாலி கிளம்பிச் சென்றிருந்தார். அக்டோபர் 2019-ல் ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் நடை பெறும் சமயத்திலும் அவர் வெளிநாட்டிற்கு கிளம்பினார். 2015-ல் பிப்ரவரி 16-ல் ஆசிய நாடுகளுக்கு கிளம்பிய ராகுல் 60 நாட்களுக்கு பின் நாடு திரும்பி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x