Published : 08 Jan 2022 06:19 PM
Last Updated : 08 Jan 2022 06:19 PM

5 மாநிலத் தேர்தல்: எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டத் தேர்தல்? - முக்கிய அம்சங்கள்

புதுடெல்லி : உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

நாட்டில் கரோனா 3-வது அலை பரவி வரும் நிலையில் 5 மாநிலத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநிலங்களின் தேர்தல் ஆணையர்கள் ஆகியோருடன் தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி முடித்துவிட்டது.

5 மாநிலத் தேர்தல்களையும் எப்போது நடத்துவது, எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளும், பஞ்சாப்பில் 117 தொகுதிகளும், உத்தரகாண்டில் 70 தொகுதிகளும், மணிப்பூரில் 60 தொகுதிகளும் கோவாவில் 40 தொகுதிகளும் உள்ளன.

உ.பி.யில் 7 கட்டத் தேர்தல்: தேதி என்ன?

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. வரும் பிப்ரவரி 10-ம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை தேர்தல் நடக்கிறது. முதல் கட்டம் பிப்ரவரி 10-ம் தேதியும், 2-வது கட்டம் 14-ம் தேதியும், 3-வது கட்டம் 20-ம் தேதியும், 4-வது கட்டம் 23-ம் தேதியும், 5-வது கட்டத் தேர்தல் 27-ம் தேதியும் நடக்கிறது. மார்ச் 3-ம் தேதி 6-வது கட்டத் தேர்தலும், 7-ம் தேதி கடைசிக் கட்டத் தேர்தலும் நடக்கின்றன.

உத்தரப் பிரதேசத்தில் முதல்கட்ட வாக்குப் பதிவுக்கு வேட்புமனு வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. 21-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யக் கடைசி நாளாகும். 24-ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 27-ம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறக் கடைசித் தேதியாகும்.

2-வது கட்டத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 21-ம் தேதி தொடங்குகிறது. 28-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். 29-ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 31-ம் தேதி வேட்புமனு திரும்பப் பெறக் கடைசி நாளாகும்.

3-வது கட்டத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 25-ம் தேதி தொடங்குகிறது, பிப்ரவரி 1-ம் தேதி வேட்புமனுவைத் தாக்கல் செய்ய கடைசி நாள், 2-ம் தேதி வேட்புமனு மீது பரிசீலனையும், 4-ம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறக் கடைசி நாளாகும்.

4-வது கட்டத் தேர்தலுக்கு வரும் 27-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 3-ம் தேதி வேட்பு மனுவுக்குக் கடைசி நாள், 4-ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 7-ம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெறக் கடைசி நாளாகும்.

5-வது கட்டத் தேர்தலுக்கு பிப்ரவரி 1-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கலுக்குக் கடைசி நாள் 8-ம் தேதியும், வேட்புமனு பரிசீலனை 9-ம் தேதியும், வாபஸ் பெற 11-ம் தேதியும் கடைசி நாளாகும். 14-ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 16-ம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறக் கடைசி நாளாகும்.

6-வது கட்டத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 4-ம் தேதியும், கடைசி நாள் 11-ம் தேதியாகும். வேட்புமனு பரிசீலனை 16-ம் தேதியும், மனுவைத் திரும்பப் பெற 17-ம் தேதி கடைசி நாளாகும்.

7-வது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தலுக்கு பிப்ரவரி 10-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, 17-ம் தேதி முடிகிறது. வேட்புமனு பரிசீலனை 18-ம் தேதியும், 21-ம் தேதி திரும்பப் பெறக் கடைசி நாளாகும்.

மணிப்பூர்

மணிப்பூரில் தேர்தல் இரு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத் தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதியும், 2-வது கட்டம் மார்ச் 3-ம் தேதியும் நடக்கிறது.

3 மாநிலங்கள்

மற்ற 3 மாநிலங்களான உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகியவற்றுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடக்கிறது. வரும் 21-ம் தேதி இந்த மாநிலங்களில் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது, 28-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யக் கடைசி நாளாகும். 29-ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 31-ம் தேதி வேட்புமனுவைத் திரும்பப் பெறக் கடைசி நாளாகும்.

அனைத்து மாநிலத் தேர்தலும் முடிந்தபின் மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது''.

இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x