Published : 07 Jan 2022 06:52 PM
Last Updated : 07 Jan 2022 06:52 PM

ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு 7 நாட்களுக்கு வீட்டுத் தனிமை கட்டாயம்: மத்திய அரசு

ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு 7 நாட்களுக்கு வீட்டுத் தனிமை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சம் பேருக்கும் மேலானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்நிலையில், விமானப் பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஒமைக்ரான் பரவல் காணப்படும் ஹை ரிஸ்க் பட்டியலில் மேலும் 9 நாடுகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 19 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அதன்படி செவ்வாய்க்கிழமை முதல் ஹை ரிஸ்க் பட்டியலில் உள்ள வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளும் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு கரோனா உறுதியானால் அவர்கள் தனிமைப்படுத்துதல் மையத்துக்கு அனுப்பிவைக்கப்படுவர். அவர்களின் ஸ்வாப் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படும். அவர்களுக்கு அருகில் அமர்ந்தவர்களும், விமான சிப்பந்திகளும் தொற்று தொடர்பாளர்களாராகவே கருதப்படுகிறது.

ஒருவேளை பயணிக்கு நெகட்டிவ் என பரிசோதனை முடிவில் வந்தால், அவர்கள் மேலும் 7 நாட்கள் தங்களின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டும். அசவுகரியம் ஏற்பட்டால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும்.

அதேவேளையில் ரிஸ்க் ஜோனில் இல்லாத நாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகளில் தோராயமாக இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x