Published : 07 Jan 2022 07:43 AM
Last Updated : 07 Jan 2022 07:43 AM

மத்திய அரசின் கேள்விகள்

பஞ்சாபில் பிரதமர் மோடியின் கார் அணிவகுப்பை போராட்டக் காரர்கள் வழிமறித்த இடம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. அந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுமார் 20 நிமிடங்கள் காரிலேயே காத்திருந்துள்ளார்.

பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில் பிரதமரின் பயணத்துக்காக மாநில போலீஸார் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாதது ஏன் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

பாதுகாப்பு தொடர்பாக மாநில டிஜிபி வாக்குறுதி அளித்த பிறகே சாலை மார்க்கமான பயணம்தொடங்கியுள்ளது. பிரதமரின்பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் மாநில போலீஸாருக்கும் மட்டுமே பிரதமர் எந்த வழியாக செல்கிறார் என்பது தெரியும். இது போராட்டக்காரர்களுக்கு தெரிந்தது எப்படி?

பிரதமரின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் அழைப்பை ஏற்காதது ஏன் என்பன உள்ளிட்ட கேள்விகளை உள்துறை அமைச்சக வட்டாரங் கள் எழுப்பியுள்ளன.

நடவடிக்கை என்ன?

இதுதொடர்பாக பஞ்சாப் முன்னாள் டிஜிபி பிரகாஷ் சிங் கூறும்போது, "பிரதமரின் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு மாநில டிஜிபியும் மாநில தலைமைச் செயலாளருமே பொறுப்பு. அவர்கள் மீது மத்திய அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. எனினும் டிஜிபியை பதவி நீக்கம் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அழுத்தம் கொடுக்கும். எதுவானாலும் மாநில அரசே இறுதி முடிவு எடுக்க முடியும்" என்றார்.

இதனிடையே 16 முன்னாள் டிஜிபிக்கள் உட்பட 27 ஐபிஎஸ் அதிகாரிகள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை..

பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் நிகழ்ந்த பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக "வழக்கறிஞர்களின் குரல்" என்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு நேற்று பரிசீலனைக்கு வந்தது.

அப்போது மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங் வாதிட்டபோது, "பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடைபெறக்கூடாது. வழக்கை உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று கோரினார். இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ரமணா, வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மனுவின் நகலை பஞ்சாப் மாநில அரசுக்கு அனுப்ப அவர் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x