'பிரதமரைக் காக்க எனது உயிரையும் கொடுத்திருப்பேன்': பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி

'பிரதமரைக் காக்க எனது உயிரையும் கொடுத்திருப்பேன்': பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி
Updated on
1 min read

பஞ்சாப்: பிரதமரைக் காக்க எனது உயிரையும் கொடுத்திருப்பேன் எனக் கூறியுள்ளார் பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி.

முன்னதாக நேற்று, பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி விமானம் மூலம் பஞ்சாப் சென்றார். மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காரில் செல்ல முடிவு செய்தார்.

ஆனால், விவசாயிகள் போராட்டம் காரணமாக அவரது வாகன அணி வகுப்பு மேம்பாலத்தில் 15 நிமிடத்துக்கும் மேலாக நின்றது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் தனது பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக மாநில அரசிடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, "பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி ஏதும் இல்லை. பிரதமர் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நான் மேற்பார்வையிட்டேன். நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு பிரதமர் ஹெலிகாப்டரில் செல்லத்தான் முதலில் முடிவானது. அவர் சாலை வழியே செல்லும் திட்டம் கடைசி நிமிடத்தில் முடிவு செய்யப்பட்டது. பிரதமர் கலந்து கொளளளும் கூட்டம் நடக்க இருந்த இடத்தில் 70.000 நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால், வெறும் 700 பேர் மட்டுமே கூட்டத்தில் இருந்தனர். பிரதமரைக் காக்க எனது உயிரையும் கொடுத்திருப்பேன். ஆனால், அவருக்கு அப்படி எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை" என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in