

மும்பை: முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை மோசமாக சித்தரித்து ஏலம் விடுவதாக அறிவித்த ‘புல்லி பாய்' (Bulli Bai) என்னும் செயலியின் மாஸ்டர் மைண்ட்டாக இருந்தவர் உள்பட மூன்று பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 1-ம் தேதி ‘புல்லி பாய்' எனும் செயலியில் பெண் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், முஸ்லிம் பெண் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அவர்களை ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் ‘புல்லி பாய்' செயலியின் நிறுவனர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல்தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரித்த மும்பை இணைய குற்றப்பிரிவு போலீஸார், பெங்களூருவை சேர்ந்த பொறியியல் மாணவர் விஷால் ஜா என்பவர் இதன் பின்னணியில் இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து பெங்களூரு விரைந்த மும்பை போலீஸார் விஷால் ஜாவை நேற்று முன் தினம் கைது செய்து, மும்பைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மும்பை இணைய குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரஷ்மி கரண்டிகர் அவரிடம் 10 மணிநேரம் விசாரணை நடத்தினார்.
அதில் இந்துத்துவா ஆதரவாளரான விஷால் ஜா தன்னுடன் அரசியல் ரீதியாக முரண்பாடு கொண்ட பெண் ஆளுமைகளை ஏலம் விடுவதாக அறிவித்ததாக ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. மேலும், இந்த செயலியை இவர் மட்டும் தனியாக நடத்தவில்லை. இந்த செயலி தொடங்குவதில் மாஸ்டர் மைண்டாக இருந்த மேலும் இருவரை மும்பை இணைய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்துள்ளது. இதில் ஒருவர் 18 வயது இளம்பெண். இவர் உத்தராகண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்லப்படுகிறது.
இந்த வழக்கில் மூன்றாவது நபராக உத்தராகண்ட்டைச் சேர்ந்த 21 வயது மாணவர் மயங்க் ராவல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மூவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்துள்ளதும் விசாரணையில் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அதிலும், இந்த வழக்கின் பிரதான குற்றவாளியாக கருதப்படும் 18 வயது பெண்ணின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் தாய், தந்தை இருவரையும் இழந்த இந்த 18 வயது பெண் பள்ளிப்படிப்பை முடித்து பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுத தயாராகி வருகிறார்.
நேபாளத்தைச் சேர்ந்த அவரின் நண்பர் ஒருவர் கொடுக்கும் அறிவுறுத்தலின் பெயரில் இந்த செயல்களை செய்து வந்துள்ளார். `கியூ' என அழைக்கப்படும் நேபாளத்தைச் இவருக்கு ‘புல்லி பாய்' செயலில் செய்ய வேண்டிய விஷயங்களை கட்டளையிட்டுள்ளார் என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த கியூவை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை போலீஸ் எடுக்கத் தொடங்கியுள்ளது.