Published : 04 Jan 2022 08:51 AM
Last Updated : 04 Jan 2022 08:51 AM

லடாக்கின் பான்காங் ஏரியில் பாலம் கட்டும் சீனா: செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் அம்பலமானது

புதுடெல்லி: லடாக்கின் பான்காங் ஏரிப் பகுதியில் சீன ராணுவம் புதிய பாலத்தைகட்டி வருவது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020 மே மாதத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து கடந்த 2020 ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதில் சுமார் 40 சீன வீரர்கள் உயிரிழந்ததாகவும் அதை சீன அரசு மறைத்துவிட்டதாகவும் அமெரிக்க, ரஷ்ய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு பான்காங் ஏரிப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்க செய்தனர்.

லடாக்கின் பான்காங் ஏரி சுமார் 134 கி.மீ. நீளம், 5 கி.மீ. அகலம், 270 சதுர மைல் பரப்பளவு கொண்டதாகும். இதன் 40% பரப்பளவு இந்தியாவிடமும் 50% பரப்பளவு சீனாவிடமும் உள்ளது. சுமார் 10% பரப்பளவு சர்ச்சைக்குரிய பகுதியாக நீடிக்கிறது. இந்தஏரி 8 பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.இதில் 1 முதல் 4 வரையிலான பாகங்கள் இந்தியாவின் எல்லைக்கு உட்பட்டவை ஆகும். அண்மைக் காலமாக பான்காங் ஏரி பகுதியில் இந்திய ராணுவத்தின் கை ஓங்கி உள்ளது.

இந்த சூழலில் சீன எல்லைக்கு உட்பட்ட பான்காங் ஏரியின் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் அந்த நாட்டு ராணுவம் புதிய பாலத்தை கட்டி வருகிறது.

இதுகுறித்து சர்வதேச புவியியல் உளவுத் துறை நிபுணர்டேமியன் சைமன் ட்விட்டரில் செயற்கைக்கோள் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில், "பான்காங் ஏரியின் வடக்கு, தெற்கு கரையை இணைக்கும் வகையில் புதிய பாலத்தை சீன ராணுவம் கட்டி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

பான்காங் ஏரியின் வடக்கு பகுதியான குர்னாக்கில் இருந்து தெற்கு பகுதியான ரூடாக்குக்கு சாலை வழியாக செல்ல 200 கி.மீ. தொலைவை கடந்தாக வேண்டும். தற்போது இரு கரைகளையும் இணைத்து புதிய பாலத்தை சீன ராணுவம் கட்டியிருப்பதால் பயண தொலைவு 40 முதல் 50 கி.மீ. ஆக குறையும். சீன ராணுவ தரப்பில் மிக குறுகிய நேரத்தில் அதிக வீரர்களை பான்காங் ஏரிப் பகுதியில் குவிக்க முடியும்.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலின்போது சீன ராணுவம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. அப்போது முதலே பான்காங் ஏரியில் பாலத்தை கட்டத் தொடங்கிவிட்டது. தற்போது பாலம் பணிகிட்டத்தட்ட நிறைவடைந்துவிட் டது. இவை தவிர கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சாலை வசதிகளையும் சீனா மேம்படுத்தி வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x