Published : 04 Jan 2022 09:10 AM
Last Updated : 04 Jan 2022 09:10 AM

மும்பையிலிருந்து கோவா சென்ற கார்டெலியா சொகுசு கப்பலில் பயணித்த 66 பேருக்கு கரோனா

பனாஜி: மும்பையில் இருந்து கோவா சென்ற கார்டெலியா சொகுசு கப்பலில் பயணித்த சுமார் 2,000 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து கோவாவுக்கு ‘கார்டெலியா குரூஸ்’ என்ற உல்லாச சுற்றுலா கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில், புத்தாண்டை கொண்டாடும் வகையில் இக்கப்பலில் ஏராளமானோர் பயணிப்பதாக அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

2000 பேர் பயணம்

இந்தக் கப்பல் மர்ம கோவா துறைமுகம் அருகில் நிறுத்தப்பட்டபோது, மருத்துவக் குழுவினர் பாதுகாப்பு கவச உடையில் கப்பலில் ஏறினர். பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்கள் சுமார் 2000 பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு வெளியாகும் வரை யாரும் கப்பலில் இருந்து இறங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் கோவா சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே நேற்று தனது ட்விட்டர் பதிவில், “கார்டெலியா கப்பலில் இருந்து 2,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 66 பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பயணிகளை கப்பலில் இருந்து இறங்க அனுமதிப்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள்” என்று கூறியுள்ளார்.

இந்தக் கப்பலில் கடந்த ஆண்டு போதைப் பொருள் சோதனை நடத்தப்பட்டதில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

388 பேருக்கு கரோனா

கோவாவில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. நேற்று புதிதாக 388 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது. மாநிலத்தில் தற்போது 1,617 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒமைக்ரான் நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x