Last Updated : 01 Jan, 2022 10:44 AM

 

Published : 01 Jan 2022 10:44 AM
Last Updated : 01 Jan 2022 10:44 AM

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புங்கள்; கரோனா தொற்று பெரிதாக பாதிக்காது: மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங் அறிவுறுத்தல்

படம் உதவி | ட்விட்டர்

புதுடெல்லி: குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புங்கள். அவர்களுக்கு கரோனா வைரஸால் பெரிதாக எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்று மூத்த வைரலாஜிஸ்ட் ககன்தீப் காங் அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் குறைந்து தினசரி 6 ஆயிரம் என்ற அளவில் வந்தபோது, ஒமைக்ரான் பரவல் தொடங்கிவிட்டது. ஒமைக்ரான் பரவல் தீவிரமடைந்து பல்வேறு மாநிலங்களிலும் வேகமாகப் பரவி வருவதால், மீண்டும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசுகள் கொண்டு வந்துள்ளன. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் திரிபுகளை எதிர்க்கும் நோக்கில் 15 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு வரும் 3-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இன்று முதல் அதற்கு முன்பதிவும் தொடங்க உள்ளது.

இந்நிலையில் மூத்த வைரலாஜிஸ்ட் மருத்துவர் ககன்தீப் காங் செய்தி நிறுவனத்துக்கு நேர்காணல் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:

வைராலஜிஸ்ட் ககன்தீப் காங்

''குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று நான் கூறுகிறேன். பொதுவாக கரோனா வைரஸ் தொற்று, குழந்தைகளுக்குப் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது. மாணவர்கள் பள்ளிக்கும், வகுப்புக்கும் சென்றால் கரோனா தொற்று ஏற்படும், தீவிரமடையும் என்று எண்ணுவதைவிட, அவர்கள் வகுப்புகளிலும், சக மாணவர்களிடமும் உரையாடும்போதும், பழகும்போதும் அவர்கள் பெறும் பலன்கள்தான் அதிகம்.

குழந்தைகளைப் பொறுத்தவரை சார்ஸ் கோவிட் தொற்று அவர்களுக்கு நல்வாய்ப்பாக தீவிரமாக இருக்கவில்லை. மிக மிக அரிதான சூழல்களில் மட்டுமே அவர்களுக்குப் பெரிதாக பாதிப்பு இருக்கும். ஆரோக்கியமான குழந்தைகளுக்குப் பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது” எனத் தெரிவித்தார்.

பூஸ்டர் தடுப்பூசி, ஒமைக்ரான் பற்றி ககன்தீப் காங் கூறுகையில், “பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் எந்தத் தடுப்பூசியைச் செலுத்தலாம் என்று அறிந்த கொள்ளக்கூடப் போதுமான தரவுகள் இல்லை.

அறிவியல் வல்லுநர்களைப் பொறுத்தவரை கரோனா வைரஸ்களில் உருமாறி வந்துள்ள ஒமைக்ரான் வைரஸ் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது. மற்ற உருமாற்ற வைரஸ்களைவிட ஒமைக்ரான் வைரஸ் குறைந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம் நாட்டில் மக்கள்தொகை அதிகம், அதிகமானோர் தடுப்பூசி செலுத்திவிட்டார்கள், அதிகமானோர் நோய்த் தொற்றுக்கும் ஆளாகிவிட்டார்கள் என்பதால், பெரிதாக பாதிப்பு ஏற்படுத்தாது. ஆனால், தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லை. டெல்டா வைரஸைப் பற்றி கவலைப்படும் அளவுக்கு ஒமைக்ரான் பற்றி பயப்படத் தேவையில்லை.

உலகில் அடுத்தடுத்து புதிதாக வைரஸ்கள் உருவாகி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், வைரஸ்களோடு மனிதர்கள் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்தபோதிலும் அதைச் சமாளிக்க அரசுகளும், மக்களும் தயாராகவே இருக்கிறார்கள்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல் இப்போது இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம்மிடம் வைரஸை எதிர்க்க ஏராளமான கருவிகள் வந்துவிட்டன, வைரஸைப் பற்றி புரிந்து கொண்டோம். பரிசோதனை, தடுப்பு முயற்சிகள், சிகிச்சை முறைகள், தடுப்பூசிகளை எவ்வாறு பயன்படுத்துவது, தீவிரத்தன்மையுடன் தடுப்பூசி தயாரிப்பது எனப் பல கருவிகளை வைத்துள்ளதால் அச்சப்படத் தேவையில்லை.

அடுத்தடுத்துகூட அலைகள் உருவாகலாம். 4-வது, 5-வது அலை கூட உருவாகலாம். சுவாசக் குழாயைப் பாதிக்கும் வைரஸ்களாக இருக்கும்போது, காலநிலையோடு தொடர்புடையதாக இருக்கும். ஆதலால் குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் மீண்டும் வரலாம். ஆனால், முதல், 2-வது அலைபோல் இருக்கும் என நினைக்கக் கூடாது. வைரஸின் தீவிரத்தை மட்டுமே பார்க்க வேண்டும்''.

இவ்வாறு ககன் தீப் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x