

புதுடெல்லி :நாட்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளில் நிதியுதவி வழங்கும் பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் 10-வது தவணையை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் முதல் “பிரதமர் விவசாயிகள் நிதியுதவி” திட்டத்தின் கீழ் சிறிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளில் தலா 2,000 ரூபாய் வீதம் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதுவரை 9 தவணைகளில் விவசாயிகளுக்குப் பணம் வழங்கப்பட்டுள்ளது.
10-வது தவணை நிதி வழங்கும் நிகழ்ச்சி காணொலி வாயிலாக இன்று நடக்கிறது,பிரதமர்மோடி பங்கேற்று 10-வது தவணையை வெளியிடுகிறார். இந்த 10-வது தவணையில் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை ரூ.1.60 லட்சம் கோடி விவசாயிகள் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடி 351 விவசாயி தயாரிப்பு அமைப்புகளுக்கு ரூ.14 கோடி நிதியுதவியை வழங்க உள்ளார். இதன் மூலம் 1.24 லட்சம் விவசாயிகள் பலன் அடைவார்கள். அதன்பின் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் பங்கேற்க உள்ளார்