Last Updated : 31 Dec, 2021 09:03 AM

 

Published : 31 Dec 2021 09:03 AM
Last Updated : 31 Dec 2021 09:03 AM

முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் தேர்தலை சந்திக்க பாஜக செயற்குழு முடிவு: முன்னாள் முதல்வர் எடியூரப்பா அதிருப்தி

கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் சந்திக்க பாஜக செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்ற பிறகு அங்கு நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல், மேலவைத் தேர்தல், பஞ்சாயத்து தேர்தல் ஆகியவற்றில் பாஜகவுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.

இதனால் பசவராஜ் பொம்மையை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என சில மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர்.

இந்நிலையில், கர்நாடக பாஜக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகளுக்கான செயற்குழு கூட்டம் ஹுப்ளியில் கடந்த செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்கள் நடந்தது. பாஜக மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால் முன்னாள் முதல்வர் எடியூரப்பா இந்த‌ கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.

முன்னாள் துணை முதல்வர் அஸ்வத் நாராயணும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்காமல் எடியூரப்பா தன் மகன் விஜயேந்திராவுடன் துபாய்க்கு சென்றுள்ளதால் பாஜக மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக பாஜக மேலிட பொறுப்பாளர் அருண் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜக செயற்குழு கூட்டத்தில் 2023-ம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தல், உட்கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. எடியூரப்பாவின் பயணம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டு இருந்ததால் அவரால் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதைப் பற்றி விரிவாக பேச விரும்பவில்லை.

முதல்வர் மாற்றம் குறித்த செய்தியில் உண்மை இல்லை. முதல்வரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. பசவராஜ் பொம்மையே முதல்வராக தொடர்வார். அவருக்கு எதிராக கட்சிக்குள் யாரும் பேசவில்லை. மேலிடத் தலைவர்களும் இதுபற்றி யோசிக்கவில்லை. எனவே கட்சி நிர்வாகிகள் யாரும் முதல்வர் மாற்றம் குறித்து பேசக்கூடாது. கட்சிக்கு இத்தகைய நெருக் கடியை உருவாக்குவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பசவராஜ் பொம்மை தலைமை யிலே பாஜக 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும். அதில் 150 இடங்களை கைப்பற்றும் என நம்புகிறேன்.

இவ்வாறு அருண் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x