Published : 30 Dec 2021 07:07 AM
Last Updated : 30 Dec 2021 07:07 AM
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த மாதம் எஸ்டிபிஐ (பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் அரசியல் கட்சி) கட்சி நிர்வாகியை மர்ம நபர்கள் கொலை செய்தனர். இதற்கு பழிவாங்கும் விதமாக பாஜக மூத்த நிர்வாகி ஒருவரை எஸ்டிபிஐ கட்சியினர் வெட்டிக் கொன்றனர்.
இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக ஆர்எஸ்எஸ், எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த பலரை போலீஸார் கைது செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளாவின் பலபகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியினருக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது.
இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது எஸ்டிபிஐ கட்சியினர் அண்மையில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியை சேர்ந்தவர்களை போலீஸார் பிடித்து விசாரித்த போது, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் குறித்த தகவல்களை சிவில் போலீஸ் அதிகாரி ஆனஸ் என்பவர் தங்களுக்கு வழங்கி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியை இடைநீக்கம் செய்து இடுக்கி மாவட்ட எஸ்.பி. நேற்றுஉத்தரவிட்டார். அவரிடம் தீவிரவிசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT