Published : 29 Dec 2021 06:01 PM
Last Updated : 29 Dec 2021 06:01 PM

சிறுமி பலாத்கார வழக்கில் ஆயுள் சிறை: தண்டனை வழங்கிய நீதிபதி மீது குற்றவாளி செருப்பு வீசியதால் பரபரப்பு

சூரத்: குஜராத் மாநிலம், சூரத்தில் 5 வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 வயது இளைஞருக்கு போக்சோ நீதிமன்ற நீதிபதி ஆயுள் சிறை வழங்கி தீர்ப்பு அளித்தார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த இளைஞர் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி நீதிபதி மீது வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியின் குடும்பத்தார் சூரத்தில் தங்கி இருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் அந்தக் குடும்பத்தில் இருந்த 5 வயதுச் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக நடந்த போலீஸார் நடத்திய விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த சுஜித் கேத் என்ற 27 வயது இளைஞர் அந்தச் சிறுமிக்கு சாக்லேட், பணம், விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றைக் காண்பித்து ஆசை வார்த்தை கூறி தனியாக ஒரு இடத்தில் பலாத்காரம் செய்துவிட்டு, கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சூரத் நகர போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சுஜித் கேத்தைக் கைது செய்தனர். விசாரணையில் 26 பேர் அந்த இளைஞருக்கு எதிராக சாட்சி அளித்தனர். 56 வகையான ஆவணங்களை போலீஸார் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கில் சூரத் நகர போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.எஸ். கலா இன்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், “சுஜித் கேத் தனது ஆயுள் காலம் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும்” எனத் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் ஆத்திரமடைந்த சுஜித் கேத், தனது காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி நீதிபதி மீது வீசினார். ஆனால், செருப்பு நீதிபதி அமர்ந்திருந்த மேடை மீது விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக சுஜித் கேத்தை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் நீதிபதி மீது செருப்பு வீசிய குற்றவாளியின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x