Published : 27 Dec 2021 09:57 PM
Last Updated : 27 Dec 2021 09:57 PM

அனுமதியில்லாமல் பெண்ணின் காலைத் தொட்டாலும் கூட குற்றமே: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை: அனுமதியில்லாமல் ஒரு பெண்ணின் காலைத் தொட்டாலும் கூட அது அவரின் மாண்பைக் குறைக்கும் செயல். அதனால் அச்செயல் குற்றமாகவே கருதப்படும் என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை தான் இத்தகையத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

வழக்கின் பின்னணி: மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டம் பர்டூர் டவுனைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜூலை 2014 ஆம் ஆண்டு இச்சம்பவம் நடந்தது. சம்பவத்தன்று மனுதாரர் (பெண்) வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது கணவர் வீட்டில் இல்லாத நேரம், அவரது அண்டைவீட்டு நபர் ஒருவர் அப்பெண்ணிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். கணவர் எப்போது திரும்புவார் எனக் கேட்டுள்ளார்.

பின்னர் இரவு 11 மணியளவில் அப்பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டினுள் அத்துமீறி நுழைந்து அப்பெண்ணின் காலைத் தொட்டுக் கொண்டிருந்துள்ளார். தூக்கத்திலிருந்து கண்விழித்துப் பார்த்த அப்பெண் அதிர்ந்து போனார்.

அடுத்த நாள் தனது கணவர் வந்தவுடன் காவல்நிலையத்தில் அப்பெண் அந்தப் பெண் புகாரை அளித்தார். அதன் பேரில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தான் அந்த நிகழ்விடத்திலேயே இல்லை என வாதிட்டார். மேலும், வீடு உள்ளிருந்த பூட்டப்படவில்லை என்று கூறியவர் தான் அப்பெண்ணின் காலை தான் பாலியல் இச்சையுடன் தொடவில்லை என்று தெரிவித்தார். சம்பவம் நடந்து அப்பெண் 12 மணி நேரம் கழித்து புகார் கொடுத்ததிலும் உள்நோக்கம் இருக்கிறது என்றார்.

2015 ஆம் ஆண்டு இந்த வழக்கில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த நபருக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354ன் கீழ், பெண்ணின் மாண்பை அவமதித்தாக சிறைத் தண்டனை விதித்தது. 2 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த நபர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்ற தனி நீதிபதி எம்.ஜி.செவில்கர் தலைமையிலான அமர்வு உன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்தார். 1996 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பெண்ணின் மாண்புக்கு அவமதிப்பு ஏற்படுத்திய வழக்கில் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை சுட்டிக் காட்டினார்.

ஒரு பெண்ணின் மாண்பு என்பது அவரது பிறப்பு தொட்டே கூடவே வருகிறது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் பெண்ணிடம் அவரது கணவர் வீட்டில் இல்லை என்பதை அறிந்து கொள்ள முற்பட்டுள்ளார். மேலும், கணவர் எப்போது வருவார் என்பதைத் தெரிந்து கொள்ளவும் முற்பட்டுள்ளார். பின்னர் வீட்டினுள் நுழைந்து அப்பெண் தூங்கிக் கொண்டிருக்கையில் அவளது கால்களைத் தொடுதல் என்பது பாலியல் இச்சையைத் தவிர வேறு எதுவுமே இல்லை. ஆகையால் அந்த நபருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்கிறது எனக் கூறினார்.

அதேபோல், அப்பெண் போலீஸில் புகாரளிக்க தனது கணவர் வருகைக்காகவே காத்திருந்துள்ளார். இந்த காத்திருப்பை தவறு என்றும் திட்டமிட்ட தாமதம் என்றும் கூற முடியாது என்று நீதிபதி கூறியுள்ளார்.

பெண்ணின் மற்ற பாகங்களைப் போன்றது தான் கால்களும். ஆகையால், பெண்ணின் அனுமதியில்லாமல் அவரது கால்களைத் தொடுவது என்பது அவரின் மாண்பைக் குறைக்கும் செயல். அதனால் அச்செயல் குற்றமாகவே கருதப்படும் எனத் தீர்ப்பளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x