Last Updated : 27 Dec, 2021 12:15 PM

 

Published : 27 Dec 2021 12:15 PM
Last Updated : 27 Dec 2021 12:15 PM

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தள்ளிப்போகுமா?- தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

கோப்புப்படம்

புதுடெல்லி: நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் 2022-ம் ஆண்டு நடக்கும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதில் ஏதேனும் சிக்கல் வருமா அல்லது தள்ளி வைக்கலாமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2022-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 151 பேர் பாதிக்கப்பட்டதால், மொத்த பாதிப்பு 578 ஆக அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து காக்கவே 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் இருப்போர், முன்களப் பணியாளர்களுக்கு 2022, ஜனவரி 10-ம் தேதி முதல் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 3்-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

ஒமைக்ரான் வைரஸிலிருந்து மக்களைக் காக்கவே மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளன. இந்தச் சூழலில் அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தும்போது, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தும்போது ஒமைக்ரான் பரவல் வேகம் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆதலால், 2022-ம் ஆண்டு 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பாக நடத்துவது குறித்தும், தேர்தல் விதிகளை எவ்வாறு வகுக்கலாம், அல்லது தேர்தலை சில மாதங்களுக்குத் தள்ளிவைக்கலாமா என்பது குறித்தும் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், “டிசம்பர் 27-ம் தேதி காலை 11 மணிக்கு மேல் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மத்திய சுகாதாரத்துறை, உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்” எனத் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அலகாபாத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்த கருத்தில், உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலை உடனடியாகத் தள்ளிவைக்க வேண்டும், அரசியல் கட்சிகள் தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதைத் தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று அளித்த பேட்டியில், “ஒமைக்ரான் பரவலைச் சுட்டிக்காட்டி, உ.பி. தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. காசி விஸ்வநாதர் வளாகத்தைத் திறக்கும்போது கரோனா பரவல் பற்றித் தெரியவில்லையா? உண்மையில், உ.பி. தேர்தல் தோல்வி குறித்து பாஜகவுக்கு பயம் வந்துவிட்டது. தேர்தலை எதிர்கொள்ளத் தயங்குகிறது.

அரசியல் ரீதியாக தன்னை உயர்த்த அமலாக்கப் பிரிவை பாஜக பயன்படுத்தி அரசியல் எதிரிகளை ஓரங்கட்டுகிறது. குறிப்பாக அகிலேஷ் யாதவுக்கு எதிராக அமலாக்கப் பிரிவு ஏவப்படுகிறது. ஆனால், மக்கள் ஆதரவு அவருக்கு அதிகரிக்கிறது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x