Last Updated : 26 Dec, 2021 09:42 AM

 

Published : 26 Dec 2021 09:42 AM
Last Updated : 26 Dec 2021 09:42 AM

12 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிக்கு கோவாக்சினுக்கு அனுமதி

புதுடெல்லி: 12 வயது அதற்கு மேற்பட்டோருக்குப் பயன்படுத்த கோவாக்சின் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதிவழங்கியுள்ளது.

18வயதுக்கு கீழ் இருப்போருக்கு செலுத்த 2-வது தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜைடஸ் கெடலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது, அதன்பின் தற்போது கோவாக்சினுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

4 வாரங்கள் இடைவெளியில் இரு கோவாக்சின் டோஸ்களை செலுத்தலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசியை 12 வயது அதற்கு மேற்பட்டோருக்கு அவசரகாலத்துக்குப் பயன்படுத்த டிசிஜிஐ அனுமதி வழங்கியது. மாதத்துக்கு ஒரு கோடி தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியும் என்று ஜைடஸ் கெடிலா நிறுவனம் தெரிவித்தது.

இதுகுறித்து கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ கோவாக்சின் தடுப்பூசி தனித்துவமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வயதுவந்தோருக்குத் தனியாகவும், குழந்தைகளுக்கு தனியாகவும் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி அனைத்துப் பிரிவினருக்கும் பாதுகாப்பானது, திறன்மிக்கது என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கோவாக்சின் தடுப்பூதி வயதுவந்தோருக்கு என்னமாதிரியான பாதுகாப்பை வழங்கிடுமோ அதே பாதுகாப்பை குழந்தைகளுக்கும் வழங்கும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லா கூறுகையில் “ கடந்த செப்டம்பர் 21்ம் தேதியே குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி 1000 2 வயதுமுதல் 18வயதுள்ள தன்னார்வலர்களுக்குச் செலுத்தி பரிசோதனை முடிக்கப்பட்டது. அதன் புள்ளிவிவரங்களும் டிசிஜிஏவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

2வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு பரிசோதனை செய்து பாரத் பயோடெக் நிறுவனம் புள்ளிவிவரங்களை அனுப்பி வைத்தாலும், 12 வயது அதற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கோவாக்சின் தடுப்பூசி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள வயதுவந்தோர் பிரிவில் 89 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18வயதுக்கு கீழ் உள்ள பிரிவினர் மட்டும் 40 கோடி பேர் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x