Published : 26 Dec 2021 08:11 AM
Last Updated : 26 Dec 2021 08:11 AM

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர்: பஞ்சாப் டிஜிபி சித்தார்த் சட்டோபாத்யாயா தகவல்

பஞ்சாப் நீதிமன்ற வளாக குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் என அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.

பஞ்சாபின் லூதியானா நீதிமன்ற வளாகத்தில் கடந்த 23-ம் தேதிகுண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாநில டிஜிபி சித்தார்த் சட்டோபாத்யாயா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு காரணமான மற்றும் அதில் உயிரிழந்த நபரை 24 மணி நேரத்தில் அடையாளம் கண்டுள்ளோம். லூதியானாவின் கன்னா பகுதியைச் சேர்ந்த ககன்தீப் சிங் என்பவர்தான் அவர். மாநில காவல் துறையில் தலைமைக் காவலராக பணியாற்றிய ககன்தீப்சிங் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து 2019-ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுக்குப் பிறகு சிங் கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ககன்தீப் சிங்குக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து, நீதித் துறை மற்றும்காவல் துறையினரை அச்சுறுத்த அவர் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக ககன்தீப் சிங்கின் சகோதரர் மற்றும் 2 நண்பர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். சிறையில் இருந்தபோது அவர் காலிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் மாபியாகும்பலுடன் தொடர்பில் இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x