Published : 26 Dec 2021 08:02 AM
Last Updated : 26 Dec 2021 08:02 AM

புதிய வகை ரோஜா பூவுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்

புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி தோட்டக்கலை நிபுணரான கொடைக்கானலைச் சேர்ந்த எம்.எஸ்.வீரராகவன், புதிய வகை ரோஜா ஒன்றைவளர்த்துள்ளார். இதற்கு, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை கவுரவிக்கும் வகையில் அவரது பெயரை சூட்டியுள்ளார்.

இந்த வகை ரோஜாவானது, மெஜந்தா ஊதா நிறத்தை கொண்டுள்ளது. மேலும் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகும். கரும் பச்சை இலைகளுடன் காணப்படும் இதன் செடி, 4 முதல் 5 அடி வரை வளரக்கூடிதாகும்.

உணவுப்பயிர் சாகுபடியில் புதிய அணுகுமுறைகளை கொண்டுவருவதில் பேராசிரியர் சுவாமிநாதன் முன்னோடியாக திகழ்ந்தார். இது உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்து இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்தது. இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்றும் அவர் அழைக்கப்படுகிறார். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள நர்சரி ஒன்றில் மற்றொருவகை ரோஜாவை கே.எஸ்.ஜி.சோன் என்பவர் உருவாக்கியுள்ளார். பளபளக்கும் இளஞ்சிவப்பு நிறத்திலான இந்த ரோஜாவுக்கு ‘மான்கொம்பு ரோஜா’என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த 2 ரோஜாக்களையும் டெல்லியைச் சேர்ந்த மலர் வளர்ப்பு விஞ்ஞானியும் மத்திய அரசின் தோட்டக்கலை துறை முன்னாள் இயக்குநருமான நரேந்திர தத்லானி, சென்னையில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் இல்லத்தில் அவரை சந்தித்து வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x