Published : 26 Dec 2021 07:50 AM
Last Updated : 26 Dec 2021 07:50 AM

ஆந்திராவில் சினிமா டிக்கெட் விலை குறைப்பை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடல்: முதல்வர் ஜெகன்மோகன் அரசு சில நடிகர்களை பழி வாங்குவதாக குற்றச்சாட்டு

அமராவதி: ஆந்திராவில் சினிமா டிக்கெட் விலையை அரசு திடீரென குறைந்ததைக் கண்டித்து 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டன. இது ஒரு சில நடிகர்களை பழி வாங்கும் செயல் என அரசியல், திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆந்திராவில் ஜெகன் தலைமையிலான அரசு திடீரென சினிமா டிக்கெட்களின் விலையை குறைத்தது. அத்துடன் ஆன்லைனில் மட்டுமே அரசு சார்பில் டிக்கெட் விற்பனை நடைபெறும் என அரசாணை (எண் 35) வெளியிட்டது. இது தெலுங்கு திரைத்துறையை சேர்ந்த தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என திரைத்துறையை சேர்ந்த அனைவரையும் கடுமையாக பாதிக்கப்பட வைத்துள்ளது. இந்த அரசாணையை எதிர்த்து பல திரையரங்கு உரிமையாளர்கள் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து இந்த அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்தது.

ஆயினும் ஆந்திர அரசு மேல் முறையீடு செய்துள்ளதால், இதன் இறுதித் தீர்ப்பு வரும் ஜனவரி மாதம் 4-ம் தேதி வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்குள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், போலீஸார், வருவாய், பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், பல திரையரங்குகள் நிபந்தனைக்கு மாறாக செயல்படுவதாக ‘சீல்’ வைக்கப்பட்டு வருகிறது.

இதனால், ஆந்திராவில் உள்ள மொத்தம் 2011 திரையரங்குகளில் நேற்று மாலை வரை 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. அடுத்த சில நாட்களில் மேலும் 500 திரையரங்குகள் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ஜனசேனா கட்சித்தலைவரும், நடிகருமான பவன் கல்யாண், ஜெகன் அரசை தீவிரமாக கண்டித்து வருகிறார். இவர் மேல் உள்ள கோபத்தால்தான் ஜெகன் அரசு திரைத்துறையினர் மீது பழி வாங்குகிறது என சிலர் கூறி வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை நடிகர் ’நான் ஈ’ புகழ் நானி நடித்த ‘ஷியாம் சிங்கராய்’ எனும் படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியானது. இதற்கு முன் நடிகர் நானி பேசும்போது, ஆந்திராவில் சினிமா டிக்கெட்களின் விலை குறைப்பு ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்றும், இதனால், திரையரங்குகளின் பராமரிப்பு செலவு கூட வருவதில்லை. ஆனால், திரையரங்குகள் அருகே வைக்கப்பட்டிருக்கும் பெட்டி கடைகளில் கூட அதிக வசூல் ஆகிறது என கூறினார்.

இதனால், இவர் நடித்து வெளியான ‘ஷியாம் சிங்கராய்’ திரையிடப்பட்ட அனைத்து திரை அரங்குகளிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பல திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன.

குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.250 வரை டிக்கெட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ரூ.5, 10, 20, 40 எனவும் நகர்ப்புறங்களில் (நகராட்சி) திரையரங்களில் ரூ.20, 40, 60 எனவும், ஏசி திரையரங்குகளில் ரூ.40, 60, 100 ஆகவும்,மாநகராட்சிகளில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.75,150 மற்றும் 250 ஆகவும் டிக்கெட்விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலங்கானா அரசு திரையரங்குகளில் டிக்கெட்டின் விலையை உயர்த்தி கடந்தவியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இதனால், நடிகர், நடிகைகள், திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகரராவுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x