Published : 25 Dec 2021 07:07 PM
Last Updated : 25 Dec 2021 07:07 PM

'ஒரே இந்தியா உன்னத இந்தியா' என்பதே நாட்டின் இன்றைய மந்திரம்: பிரதமர் மோடி

அகமதாபாத்

அகமதாபாத்: 'ஒரே இந்தியா உன்னத இந்தியா' என்பது நாட்டின் இன்றைய மந்திரமாக இருக்கிறது என்றும், அனைத்து ஏழைகளுக்கும் சேவை, நலிவுற்ற அனைவருக்கும் முன்னுரிமை என்பது நாட்டின் இன்றைய கொள்கையாக உள்ளது என்றும் பிரதமர் மோடி பேசினார்.

குஜராத்தின் குருத்வாரா லாக்பட் சாஹிபில் குருநானக் தேவ் பிறந்த நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை உரையாற்றும்போது கூறியது: "குருத்வாரா லாக்பட் சாஹிப் காலத்தின் ஓட்டத்திற்கு சாட்சியாக இருக்கிறது. லாக்பட் சாஹிப் கடந்த காலத்தில் எழுச்சிமிக்கதாக இருந்தது. ஒரு காலத்தில் இந்த இடம், மற்ற நாடுகளுக்கு செல்வதற்கான மிகப் பெரிய வர்த்தக மையமாக இருந்தது. 2001-ஆம் ஆண்டு நில நடுக்கத்திற்குப் பின் குருவின் கருணையால் இந்தப் புனிதமான இடத்திற்கு சேவை செய்யும் பெருமையைப் பெற்றேன். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள், இந்த இடத்தின் பழைய பெருமையை மீட்டனர். பழங்கால எழுத்து பாணியைப் பயன்படுத்தி இந்த சுவர்களில் குருவானி பதிக்கப்பட்டது. இந்தத் திட்டம் அப்போது யுனெஸ்கோவால் பெருமை செய்யப்பட்டது.

மகா குரு சாஹிபின் கருணையால், இந்த அரசு குரு கோவிந்த் சிங்கின் 350-வது ஆண்டுவிழா, குருநானக் தேவ்வின் 550-வது ஆண்டுவிழா, குரு தேக் பகதூரின்400-வது ஆண்டு விழா ஆகிய புனிதமான விழாக்களைக் கொண்டாடும் நிலையைப் பெற்றது. சமீப ஆண்டுகளில் குருநானக் தேவ்வின் செய்தி புதிய சக்தியுடன் உலகம் முழுவதும் சென்றடைய அனைத்து நிலையிலான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கர்த்தார்பூர் சாஹிப் பாதை 2019-ல் இந்த அரசால் பூர்த்தி செய்யப்பட்டது. தற்போது குரு தேக் பகதூரின் 400-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

புனிதமான குரு கிரந்த் சாஹிபின் பிரதியை அண்மையில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வெற்றிகரமாக நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். குருவின் கருணைக்கு இதைவிட மகத்தான உதாரணம் என்னவாக இருக்க முடியும். ஒரு சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்தபோது, இந்தியாவிற்கு 150-க்கும் அதிகமான வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களை அமெரிக்கா திருப்பித் தந்தது. அவற்றில் ஒன்றாக பாரசீக மொழியில் குரு ஹர்கோவிந்த்தின் பெயர் எழுதப்பட்ட குறுவாள் இருந்தது. இதையெல்லாம் செய்ய முடிந்தது இந்த அரசுக்குக் கிடைத்த மாபெரும் வாய்ப்பு.

கல்சா பந்த் உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த பாய் மோக்கம் சிங், குஜராத்தை சேர்ந்தவர் என்பது, குஜராத்துக்கு எப்போதும் பெருமைக்குரிய விஷயமாக உள்ளது. தேவ பூமியான துவாரஹாவில் அவரது நினைவாக குருத்வாரா கட்டப்பட்டுள்ளது.

படையெடுப்பாளர்களால் தாக்குதல்களும், சரணாகதிகளும் ஏற்பட்ட காலத்தில் இந்திய சமூகத்திற்கு மகத்தான குரு பாரம்பரியத்தின் பங்களிப்பை மதிப்புடன் நினைவுகூர்கிறேன். இந்த சமூகம் குழப்பத்திலும், பிரிவினைகளிலும் மூழ்கியிருந்த போது சகோதரத்துவம் என்ற செய்தியுடன் குருநானக் தேவ் வந்தார். அதேபோல் ஒட்டுமொத்த தேசத்தின் துறவிகள் குரலை ஒருங்கிணைப்பதன் மூலம், குரு அர்ஜன் தேவ் தேசத்திற்கு ஒற்றுமை உணர்வைக் கொண்டு வந்தார். மனித குலத்தின் சேவைப் பாதையை குரு ஹர்கிஷன் காட்டினார். அது இன்னமும் சீக்கி்யர்களுக்கும், மனித குலத்தில் மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது.

குருநானக் தேவ்வும், அவருக்குப் பின் வந்த பல்வேறு குருக்களும் இந்தியாவின் மனசாட்சியைத் தூண்டியது மட்டுமின்றி இந்தியா பாதுகாப்பாக இருக்கவும் வழிகாட்டினார்கள். நமது குருக்களின் பங்களிப்பு சமூகம் மற்றும் ஆன்மீகத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. நமது நாடு, நாட்டின் சிந்தனை, நாட்டின் நம்பிக்கை, நேர்மை ஆகியவை இன்று பாதுகாப்பாக இருக்கிறது என்றால் அது சீக்கிய குருக்களின் மகா தவத்தை மையமாகக் கொண்டது.

இந்தியா மீதான பாபர் படையெடுப்பின் அபாயத்தை குருநானக் தேவ் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார். குருதேக் பகதூரின் ஒட்டு மொத்த வாழ்க்கை, தேசம் முதலில் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. குருதேக் பகதூர் மனித குலத்தின் மீதான அக்கறையில் எப்போதும் உறுதியாக நின்றார். இந்திய ஆன்மாவின் பார்வையை நமக்கு அவர் தந்தார். ‘ஹிந்த் கி சடார்’ என்று நாடு அவருக்கு அளித்த பட்டம், ஒவ்வொரு இந்தியரையும், சீக்கிய பாரம்பரியத்தோடு அவர் இணைத்ததைக் காட்டுகிறது. பயங்கரவாதத்திற்கும் மதவெறிக்கும் எதிராக நாடு எவ்வாறு போரிட வேண்டும் என்பதை ஔரங்கசீபுக்கு எதிரான குரு தேக் பகதூரின் வீரமும் தியாகமும் நமக்குக் கற்பிக்கிறது. அதேபோல் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் சாஹிபின் வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திலும் மன உறுதிக்கும் தியாகத்திற்கும் வாழும் உதாரணமாக விளங்குகிறது.

பிரிட்டிஷ் ஆட்சியில் நாட்டின் சுதந்திரத்திற்கான நமது விடுதலைப் போராட்டத்தில், சீக்கிய சகோதரர்களும், சகோதரிகளும் தீரத்துடன் போராடியது பாராட்டுக்குரியது. அவர்களின் தியாகங்களுக்கு ஜாலியன் வாலாபாக் சாட்சியமாக இருக்கிறது. கடந்த காலத்திலிருந்து நினைவூட்டல்களையும், ஊக்கத்தையும் பெறுகின்ற 75-வது ஆண்டுப் பெருவிழாக் காலத்தில், இந்தப் பாரம்பரியம் இப்போதும் உயிர்ப்புடனும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இருக்கிறது.

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை, கட்சிலிருந்து கோஹிமா வரை ஒட்டுமொத்த தேசமும், தங்களின் கனவுக்காகவும், சாதனைக்காகவும், ஒருங்கிணைந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. 'ஒரே இந்தியா உன்னத இந்தியா' என்பது நாட்டின் இன்றைய மந்திரமாக இருக்கிறது. திறன் வாய்ந்த புதிய இந்தியாவை உருவாக்குவது நாட்டின் இன்றைய இலக்காக இருக்கிறது. அனைத்து ஏழைகளுக்கும் சேவை, நலிவுற்ற அனைவருக்கும் முன்னுரிமை என்பது நாட்டின் இன்றைய கொள்கையாக உள்ளது.

கட்சில் நடைபெறும் ரான் விழாவிற்கு வருகை தருமாறு பக்தர்களைக் கேட்டுக்கொள்கிறேன். கட்ச் மக்களின் தொலைநோக்கும் கடின உழைப்பும் கட்ச் பகுதியின் மாற்றத்திற்கு சான்றாக விளங்குகிறது. அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளான இன்று அவருக்குப் புகழஞ்சலி செலுத்துகிறேன். கட்ச் மீதான வாஜ்பாயின் நேசத்தை நினைவுகூர விரும்புகிறேன். நில நடுக்கத்திற்குப் பின், இங்கு மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளில் வாஜ்பாயும், அவரது அரசும் தோளோடு தோள் நின்றது" என்றார் பிரதமர் மோடி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x