

புதுடெல்லி: கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் இந்த நேரத்தில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் உன்னதமான போதனைகளை நாம் நினைவுகூர்வோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:
“புனிதமான கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அனைத்து குடிமக்களுக்கு, குறிப்பாக நமது கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான வாழ்த்துக்களை நான் தெரிவித்து கொள்கிறேன்.
இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா மக்களின் வாழ்க்கையில் அமைதி, நல்லிணக்கம், கருணை ஆகியவற்றை நிலைநிறுத்துவதோடு சமூக மக்களிடையே ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் மேம்படுத்துகிறது. இயேசு கிறிஸ்துவின் செய்தியான அன்பு, கருணை ஆகியவை இன்றும் கூட ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஈர்ப்பது தொடர்கிறது.
நமது வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளையும், போதனைகளையும் ஏற்று நடப்பதன் மூலம் நீதியின் மாண்புகள் மற்றும் சுதந்திரத்தின் அடிப்படையிலான சமூகத்தை கட்டமைக்க இந்நாளில் நாம் உறுதி ஏற்போம்” என்று குடியரசுத் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் வாழ்த்து பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! சேவை, இரக்கம் மற்றும் பணிவு ஆகியவற்றிற்கு மிகவும் முக்கியத்துவம் அளித்த இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் உன்னதமான போதனைகளை நாம் நினைவுகூர்கிறோம். அனைவரும் நலமாகவும் வளமாகவும் இருக்கட்டும். சுற்றிலும் நல்லிணக்கம் இருக்கட்டும்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.