

புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பாதுகாப்பு வீரர்களின் கைத்துப்பாக்கிகள் மற்றும் கைப்பேசிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் அசாம் மாநிலத் துக்குச் சென்றிருந்தார். நகரசபைதேர்தலில் தனது கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்காக குவாஹாட்டியில் உள்ள காமாக்யா கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பிறகு விமானத்தில் வந்த அவருடன் அவரது பாதுகாப்பு வீரர்களில் இருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மற்ற 12 வீரர்கள், கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் கொல்கத்தா வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த ரயில் மேற்கு வங்கத்தின் கூச் பிஹார் ரயில் நிலையம் வந்தபோது 2 வீரர்களின் கைப்பைகளை காணவில்லை. அந்தப்பையில் வீரர்கள் தங்களின் கைத்துப்பாக்கி மற்றும் கைப்பேசியை வைத்திருந்தனர். இருவரும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்தனர். இந்நிலையில் அந்தப் பைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டது பின்னர் தெரிய வந்தது.
இதையடுத்து கூச் பிஹார் ரயில் நிலைய காவல் நிலையத்தில் வீரர்கள் புகார் செய்தனர். இந்த சம்பவம் குறித்து முதல்வர் மம்தா அரசின் காவல் துறை பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இது தொடர்பாக உடனே வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
நகரசபை தேர்தலில் வெற்றி
மேற்கு வங்கத்திலுள்ள 144 நகர சபைகளுக்கான தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 134 இடங்களில் (93%) வெற்றி பெற்றுள்ளது. பாஜக மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தலா இரண்டில் வெற்றி பெற்றுள்ளனர். சுயேச்சை உள்ளிட்ட இதர கட்சிகள் மூன்று நகர சபைகளை கைப்பற்றின.
கடந்த 2015-ல் நடைபெற்ற நகர சபை தேர்தலில் திரிணமூல் 114, பாஜக 7, இடதுசாரிகள் 15, காங்கிரஸ் 5, இதர கட்சியினர் 3-ல் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்த வெற்றி, தனது கட்சியை தேசிய அரசியலில் வரவேற்கும் விதத்தில் அமைந்துள்ளதாக மம்தா கூறியுள்ளார். காங்கிரஸை தவிர்த்து மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் முதல்வர் மம்தா இறங்கியிருப்பது நினைவுகூரத்தக்கது.