Published : 23 Dec 2021 08:52 PM
Last Updated : 23 Dec 2021 08:52 PM

உத்தர்காண்டில் தாழ்த்தப்பட்ட பெண் சமையல்காரர் பணி நீக்கம்: உயர்சாதி மாணவர்கள் சாப்பிட மறுத்ததால் நடவடிக்கை


டேராடூன் : தாழ்த்தப்பட்ட பெண் சமையல்காரர் சமைத்த உணவை அரசுப்பள்ளியில் பயிலும் உயர் சாதி மாணவர்கள் சாப்பிட மறுத்ததால், அந்தப் பெண் பணியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், சம்பவாத் மாவட்டம், சுகித்தாங் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த மாத தொடக்கத்தில் மோஜன்மாதா திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் சமையல் செய்ய கடந்த இரு நாட்களுக்கு முன் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் சமையல்காரர் பணியில் சேர்க்கப்பட்டார்.

ஆனால், தாழ்த்தப்பட்ட பெண் சமையல் செய்த உணவை சாப்பிட மறுத்து மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்து டிபன்பாக்ஸில் உணவைக் கொண்டு வந்து சாப்பிட்டனர். அந்தப் பள்ளியில் 66 மாணவர்கள் படிக்கும் நிலையில் 40 உயர் சாதி மாணவர்கள் அந்தப் பெண் சமைத்த உணவைச் சாப்பிட மறுத்துவிட்டனர்.

போஜன்மாதா திட்டத்தில் சமையல் செய்ய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை அமர்த்தியதற்கு மாணவர்களின் பெற்றோரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பாவாத் பகுதி தலைமை கல்வி அதிகாரி ஆர்சி புரோஹித் “ தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் சமையல்காரர் நியமனத்தில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதால் அந்த நியமனம் ரத்து செய்யப்படுகிறது. உயர் அதிகாரிகள் இந்த நியமனத்தை ஏற்கவில்லை. தற்காலிகத் தீர்வாக வேறு பெண் நியமிக்கப்படுவார்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x