Published : 22 Dec 2021 06:16 PM
Last Updated : 22 Dec 2021 06:16 PM

ஒமைக்ரான்: டெல்லியில் கரோனா பாதிப்பு 6 மாதங்களில் இல்லாத அளவு உயர்வு

புதுடெல்லி: டெல்லியில் ஒமைக்ரான் ரைவஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு கரோனா பாதிப்பு எண்ணிக்கையும் இன்று உயர்ந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் சர்வேதசப் பயணத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அதிலும் எச்சரிக்கை பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து வருவோருக்குக் கட்டாய ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் நெகட்டிவ் இருந்தால் மட்டுமே வெளியே அனுப்பப்படுகிறார்கள்.

கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் ஒமைக்ரான் தொற்று பல்வேறு மாநிலங்களில் நுழைந்துவிட்டது. ஒமைக்ரான் பரவல் எண்ணிக்கை தற்போது 213 ஆக அதிகரித்துள்ளது.

இந்த 213 பேரில் டெல்லியில் அதிகபட்சமாக 57 பேரும், மகாராஷ்டிராவில் 54 பேரும், தெலங்கானாவில் 24 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தலைநகர் டெல்லியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், கலாச்சார நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 125 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஆறு மாதங்களில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். மருத்துவமனையில் சிகிச்சை உள்ளோர் எண்ணிக்கை 624 ஆக உள்ளது.

சோதனை நேர்மறை விகிதம் இப்போது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 0.2% ஐத் தொட்டுள்ளது மற்றும் மீட்பு விகிதம் 98.21% ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. 58 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் கரோனா வைரஸால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,102 ஆக உள்ளது. கோவிட் இறப்பு விகிதம் 1.74 சதவீதம் ஆகும்.

289 நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,42,515 ஆக உள்ளது.

24 மணி நேரத்தில் 63,313 கோவிட் சோதனைகள் நடைபெற்றுள்ளன. இதில் 56,511 ஆர்டிபிசிஆர் பரிசோதனையும், 6,802 ஆன்டிஜென் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 3,21,64,981 ஆக உள்ளது. 184 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x