

புதுடெல்லி: பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய பொதுச் செயலாளர் காலித் சைபுல்லா ரஹ்மானி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மனித வாழ்க்கையில் திருமணம் முக்கியமான தேவையாகும். வாழ்வின் தார்மீக நெறிமுறைகளுக்கான பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதால் திருமணத்துக்கு வயதை நிர்ணயிக்க முடியாது. அதனால்தான் இஸ்லாம் உட்பட பல மதங்களில் திருமண வயது நிர்ணயிக்கப்படவில்லை. பெண்ணின் பெற்றோர் தங்கள் மகள் 21 வயதுக்கு முன்பே திருமண வாழ்க்கைக்குத் தகுதியானவள் என்று கருதினால் அப்போது திருமணத்தை தடுப்பது கொடூரமானது. மேலும், வயது வந்தவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் குறுக்கிடுவதாகும் இதனால், சமூகத்தில் குற்றங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே, பெண்ணின் திருமண வயதை உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.