Published : 03 Mar 2016 11:44 AM
Last Updated : 03 Mar 2016 11:44 AM

காஷ்மீர் என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் தீவிரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு நடந்த என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் டிரால் எனும் பகுதியில் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அங்கு ராணுவ அதிகாரிகள் விரைந்தனர். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

அப்போது தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கிச் சுட்டனர். தொடர்ந்து நடந்த என்கவுன்ட்டரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஹிஸ்புல் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிக் ஹூசைன் பட், முகமது இசாக் பரே, ஆசிப் அகமது மிர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆசிக் ஹூசைன் பட் என்பவர் உத்தம்பூர் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு உதவியவர் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x