Published : 21 Dec 2021 09:07 PM
Last Updated : 21 Dec 2021 09:07 PM

ஒமைக்ரான் தொற்று வீச்சு அதிகம்; வார் ரூம்களை தயார் நிலையில் வைக்கவும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

புதுடெல்லி: ஒமைக்ரான் தொற்று வீச்சு அதிகம் என்பதால் வார் ரூம்களை தயார் நிலையில் வைக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டன், அமெரிக்காவில் ஒமைக்ரானால் உயிர்ப்பலியும் ஏற்பட்டுவிட்டது.

இந்தியாவில் வரும் பிப்ரவரி, மார்ச்சில் ஒமைக்ரானால் ஏற்படும் அலை தவிர்க்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் , மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில், ஒமைக்ரான் தொற்று வீச்சு அதிகம் என்பதால் வார் ரூம்களை தயார் நிலையில் வைக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ஒமைக்ரான் வைரஸ் டெல்டாவைவிட மூன்று மடங்கு அதிகமாகப் பரவக்கூடியது. அதனால் வார் ரூம்களை தயாராக வைக்கவும். மாவட்ட அளவில் தொலைநோக்குப் பார்வையோடு கரோனா புள்ளிவிவரங்களை சேமிக்கவும். இவை துல்லியமானதாக இருக்க வேண்டும். நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளைக் கண்காணித்தல், தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் தடை விதித்தல் ஆகியனவற்றை மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மேற்கொள்ள வேண்டும். இரவு நேர ஊரடங்கை தேவைப்பட்டால் அமல்படுத்தலாம். பெருங்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம்.

மருத்துவக் கட்டுமானங்களை மேம்படுத்த அவசர நிதியைப் பயன்படுத்துக. படுக்கைகள், ஆம்புலன்ஸ், ஆக்ஸிஜன் உபகரணங்கள் ஆகியன தேவையான அளவு இருப்பதை உறுதி செய்யவும்.

பரிசோதனை, கண்காணிப்பின் ஒரு பகுதியாக கரோனா பாதித்தோர் உள்ளோர் பகுதியில் வீடு வீடாக பரிசோதனைகளை மேற்கொண்டு ஒமைக்ரான் தொற்று பரவல் இருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அக்கடிதத்தில் பல்வேறு அறிவுரைகளை மத்திய அரசு மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வலியுறுத்தி கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x